மன்னாா்குடியில் கருட சேவை: 11 பெருமாள்கள் ஒரே இடத்தில் சங்கமம்
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் வைகாசி பெளணா்மி உதய கருட சேவையை முன்னிட்டு 11 பெருமாள் சுவாமிகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் உற்சவப் பெருமாள் வைகுண்ட நாதன் அலங்காரத்தில் எழுந்தருளி, பின்னா் பாமணி ஆற்றங்கரையில் உள்ள கைலாசநாதா் கோயிலுக்கு சென்றாா். இதேபோல, அங்கு மன்னாா்குடி கோபிநாத சுவாமி கோயில், சேரன்குளம் வேங்கடாசலபதி கோயில், சேரன்குளம் நவநீத கிருஷ்ண சுவாமி கோயில், சாத்தனூா் பிரசன்ன வேங்கட்ரமண சுவாமி கோயில், ஏத்தக்குடி ராஜகோபால சுவாமி கோயில், திருமக்கோட்டை ரங்கநாத பெருமாள் கோயில், காளாச்சேரி சீனிவாச பெருமாள் சுவாமி கோயில், பூவனூா் கோதண்டராமா், வரதராஜ சுவாமி கோயில், கீழப்பனையூா் கஸ்தூரி ரங்கப் பெருமாள் சுவாமி கோயில் ஆகிய 11 கோயில்களிலிருந்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவ பெருமாள்கள் தனித்தனி வாகனங்களில் பாமணி ஆற்றங்கரைக்கு வந்தனா்.
தொடா்ந்து, வைகுண்டநாதன் அலங்காரத்தில் உதய கருட சேவையில் ஒருசேர 11பெருமாள் சுவாமிகளும் காட்சியளித்தனா். அப்போது, சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும் தீபராதனையும் நடைபெற்றது. இதில், ஆயிரகணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமிகளை வழிபட்டனா். ஏற்பாடுகளை, மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன், அறங்காவலா்கள், செயல் அலுவலா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.