செய்திகள் :

‘மன்னிப்பு’ மனம் வருந்திக் கேட்பதா? வற்புறுத்திப் பெறுவதா?

post image

கன்னட மொழி குறித்த சர்ச்சைக்கு நடிகர் கமல் ஹாசன் மன்னிப்புக் கேட்க மறுத்தது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

அரசு, நீதிமன்றம் உள்பட எந்த அமைப்பும், தனிநபர் எவரும், எவரொருவரையும் மன்னிப்புக் கேட்குமாறு வற்புறுத்துவதோ, கட்டாயப்படுத்துவதோ, மிரட்டுவதோ கூடாது. அவ்வாறான சொல், செயல், ஆணை எதுவாயினும், அது வற்புறுத்தப்படுபவரின் தனிமனித மாண்பை, அவரது கண்ணியத்தை, மனித மாண்புடன் வாழ்வதற்கான தனிமனிதரின் உள்ளார்ந்த உரிமையைத் தகர்க்கும் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். மேலும், எழுத்து மூலமாகவோ, பொதுவெளியிலோ “மன்னிப்பு” கேட்குமாறு எந்தச் சட்டமும் எவரொருவரையும் எந்த நிலையிலும் கட்டாயப்படுத்த முடியாது.

‘குற்றம் செய்தவர்’ என்று கருதப்படுபவரை மன்னிப்புக் கேட்குமாறு கட்டாயப்படுத்தப்படுவதற்கு, ஓர் இருண்ட தத்துவ ஆதரவு இருந்தது என்பதும் அறிய உரியதே.

18 ஆம் நூற்றாண்டின் தத்துவஞானி இம்மானுவேல் கான்ட் கட்டாய மன்னிப்புக் கோருதலை ஆதரித்தார். கட்டாய மன்னிப்புக் கோருதலை / வழங்குவதை அவர் ஒரு சடங்கு (Ritual) அல்லது பொது அவமானத்தின் வடிவமாகப் பார்த்தார். உயர் சமூக அந்தஸ்துள்ள ஒருவர், குறைந்த சமூக அந்தஸ்துள்ள ஒருவருக்குச் செய்த அவமானங்களுக்குப் ‘பண அபராதம்’ பொருத்தமான தண்டனையாக இருக்க முடியாது என்று கான்ட் நினைத்தார்.

ஒரு குறைந்த அந்தஸ்துள்ள நபரிடம் மன்னிப்புக் கேட்பதற்கான அபராதத்தின் நிதிச் செலவைவிட சமூகச் செலவே (Social expense), மிக அதிகம். ஆதலால், ஏழை அல்லது குறைந்த அந்தஸ்துள்ள நபரிடம் அவமானகரமான பொது மன்னிப்பு கேட்கக் குற்றவாளியைச் சட்டப்பூர்வமாக கட்டாயப்படுத்துவது மிகவும் பொருத்தமான தண்டனை என்று கான்ட் வாதிட்டார். ஏனெனில், அது ஒருவரை அவமானப்படுத்திய நபரை அவமானப்படுத்துவதன் மூலம் தண்டிப்பதாக கான்ட் கருதினார். நிச்சயமாகக் கான்டின் கருத்து, தற்கால மனித உரிமைச் சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்க முடியாது.

இந்தியச் சட்ட நடைமுறையில், எந்த நீதிபதியும் - நீதிமன்ற அவமதிப்பு தவிர்த்த -பொதுவானதொரு விஷயத்தில் வாய்மொழியாகத் தன் கருத்தைப் பேச்சு வேகத்தில் வெளிப்படுத்தியதற்காக ஒரு நபரிடம் மன்னிப்புக் கேட்குமாறு பரிந்துரைக்கவோ, வலியுறுத்தவோ முடியாது.

ஒருசில சந்தர்ப்பங்களில், ‘மன்னிப்புக் கேட்பது’ என்பது நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான சக்தி வாய்ந்த ஒரு வழிமுறையாகலாம். அது நல்ல நம்பிக்கையின் (Good Faith) அடையாளமாகவும், சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான அல்லது சட்டநடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கான ஒருவழியாகவும் உதவலாம். அதே நேரத்தில், ‘மன்னிப்புக் கேட்பது’ என்பதன் மூலம் சட்ட நடவடிக்கைகளைத் தடுக்கவோ, சட்டப்படியான தண்டனையைத் தவிர்க்கவோ ஏதுவானதொரு கேடயமாக யாரும் அதனைப் பயன்படுத்தவும் முடியாது என்பதை நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

மிக அண்மையில் நமக்கருகே நடைபெற்றுள்ள ஒரு நிகழ்வு இக்கட்டுரை உருவாகக் களம் தந்துள்ளது. அக்காரணத்தால், அந்நிகழ்வுடன் தொடர்புடைய எவருக்கும், எந்த அமைப்பு அல்லது நிறுவனத்திற்கும், எவரது கருத்திற்கும் ஆதரவாகவோ, எதிராகவோ இக்கட்டுரையை அமைத்துப் பார்க்க யாரும் முயல வேண்டியதில்லை.

‘மன்னிப்பு,’ (Forgiving; Apology) மன்னிப்புக் கேட்டல், (Apologizing) மன்னிப்புக் கேட்க வற்புறுத்தல் / கட்டாயப்படுத்துதல் (Demand / compulsion for an apology) என்ற விஷயங்களே இக்கட்டுரையின் கருப்பொருள். கேட்கப்படுவதையும் (Apology)  வழங்கப்படுவதையும் (Forgiving) தமிழில் ‘மன்னிப்பு’ என்ற ஒற்றைச்சொல் குறிக்கிறது என்ற புரிதலோடு மேற்செல்வோம்.

நிகழ்வு : நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், கமல் ஹாசன் தனது நிறுவனத்தின் திரைப்படம் ஒன்றை ஜூன் 5 முதல் கர்நாடகத்தில் வெளியிடவுள்ள திரையரங்குகளுக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட என்ற வேண்டுகோளுடன் அந்த மாநில உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த ரிட் மனு ஏன் அவசியமானதென்றால், ஜூன் 5-க்குச் சற்று முன்னர், சென்னையில் நடந்த அந்தத் திரைப்பட இசைவெளியீட்டு நிகழ்வில் - ‘’தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது’’ என்று - பேச்சுவாக்கில் நடிகர் தெரிவித்ததாகக் கூறப்படும் ஒரு கருத்து, கர்நாடகத்தில் “கன்னட மொழிபேசும் மக்களது  உணர்வுகளைப் பாதித்திருப்பதால்”, தன் பேச்சுக்கு நடிகர் மன்னிப்புக் கேட்காவிட்டால் அந்தப் படம் தம் மாநிலத்தில் திரையிடப்படாது என்று கர்நாடகத் திரைப்பட வர்த்தக சங்கம் (கே.எஃப்.சி.சி) அறிவித்ததால் அவசியமானது.

குறிப்பிட்ட ரிட் மனுவை விசாரிக்கும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா, “சமீபத்தில் மனுதாரர் / நடிகர் கன்னட மொழி பற்றிப் பேசிய ஒரு பேச்சு மாநிலத்தில் அந்த மொழி பேசும் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருப்பதாகக்” கூறியதுடன், மனுதாரர் "ஒரே ஒரு மன்னிப்புக் கேட்டால் நிலைமை சரியாகிவிடும்" என்று மன்னிப்புக் கேட்குமாறு அந்நடிகருக்கு அழுத்தப் பரிந்துரை செய்துள்ளார். மேலும், ‘’கர்நாடகத்திலிருந்து கோடிக்கணக்கில் சம்பாதிக்க விரும்புகிறீர்கள், ஆனால் மன்னிப்புக் கேட்க மாட்டீர்களா?’’ என்றும் காட்டமாகக் கேட்டு, மன்னிப்புக் கேட்குமாறு நடிகர் / தயாரிப்பாளரைக் கட்டாயப்படுத்தியுள்ளார், நீதிபதி.

ஆக, வழக்கின் தொடக்கத்திலேயே - எந்த விசாரணையும், ஆய்வும் வெளிப்படையான நிகழ்வுகளும் காணப்படாமலேயே - ”கன்னட மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியிருப்பதான”- கே.எப்.சி.சியின் ஊகமான கூற்றை, நீதிபதி முழுதாக ஏற்றுக்கொண்டுவிட்டது போல் வெளித்தெரிகிற வருந்தத்தக்க நிலையைச் சட்டத்தின் ஆட்சி குறித்த கவலையுடன் சுட்டிக்காட்டத்தான் வேண்டியுள்ளது.

நீதிபதியின் கூற்றுகளுக்குப் பதிலளிக்கும் விதமாகப், படத் தயாரிப்பு நிறுவனத்தின் வழக்குரைஞர், ‘’கன்னட மொழியின் பரிணாமம் தொடர்பாகத் தன் கட்சிக்காரர் / நடிகர் சமீபத்தில் கூறியது மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும், கன்னட மொழி மீதான தனது கட்சிக்காரரின் அன்பும், மதிப்பும் உண்மையானது; தீங்கிழைக்கும் எந்த நோக்கத்துடனும், திட்டமிட்டும் எதுவும் பேசப்படவில்லை, எனவே நடிகர் / தன் கட்சிக்காரர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை’’ என்று தன் தரப்பு நியாயத்தை வலியுறுத்தியதோடு, தன் கட்சிக்காரர் கே.எஃப்.சி.சி.க்கு எழுதியுள்ள கடிதத்தையும் நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டினார்.

மனுதாரரது கடிதத்தினை வழக்குரைஞர் வாசிக்கக் கேட்ட நீதிபதி, ‘மன்னிப்பு’ என்ற ஒரு வார்த்தை அந்தத் கடிதத்தில் காணப்படவில்லையே... ஒரு குறியீட்டு மன்னிப்புகூட அதில் இல்லையே” என்று வெகுண்டு அடிக்கோடிட்டுக் காட்டி, நடிகர் / தயாரிப்பாளர் மன்னிப்புக் கோர வேண்டும் என்ற முரண் நிலைப்பாட்டில் நிற்கிறார். வழக்கின் அடுத்த அமர்வு ஜூன் 10 என அறிவிக்கப்பட்டது (இந்த அமர்வில் நீதிபதி எம். நாகபிரசன்னா, "இந்த நாடு மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொதுவெளியில் ஒரு நபர் இவ்வாறு பேசக் கூடாது. கர்நாடக மக்கள் மன்னிப்பை மட்டுமே கேட்கிறார்கள்," என்றதுடன், கமல்ஹாசன் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு (KFCC) அனுப்பிய கடிதத்தில் "மன்னிப்பு" என்ற வார்த்தை இல்லை என்று சுட்டிக்காட்டி, "இது கட்டாயப்படுத்துவது அல்ல, அவருக்கு இருக்க வேண்டிய பண்பு," என்று தெரிவித்துள்ளார்.)

நடிகர்கள் கமல் ஹாசன், சிவராஜ்குமார்

தயாரிப்பாளர் / நடிகர் சொன்ன கருத்து, கன்னட மொழியின் தோற்றம் பற்றிய ஓர் ஆய்வுச் சொற்பொழிவிலோ, அல்லது அப்பொருள் குறித்த ஆய்வு நூலிலோ, அல்லது ஆய்வுக் கட்டுரையிலோ வெளியிடப்பட்டதல்ல. மிகச் சாதாரணமாக, போகிறபோக்கில், பேச்சுவாக்கில், அரங்கிலிருந்த கன்னட நடிகர் சிவராஜ்குமாரை நோக்கி, ‘ நீங்களும் நானும் திரைக் குடும்பத்துச் சகோதரர்கள், உங்கள் மொழியும் என் மொழியும் ஒரு குடும்பந்தான்’ என்று குறிப்பிடும் கருத்தில் வெளிவந்த - தனிப்பட்ட, -அன்றைய பேச்சில் வேறு தொடர்பற்ற -ஒற்றை வாக்கியம் அது. ஆதலால், வேண்டுமென்றே திட்டமிட்டுத் தவறாக - எவருடைய மொழியுணர்வையும் புண்படுத்தும் நோக்கில் - எதுவும் பேசவில்லையாதலால் மன்னிப்புக் கேட்க அவசியம் எழவில்லை என உறுதியாக நிற்கிறது, நடிகர் / தயாரிப்பாளர் தரப்பு.

இதையும் படிக்க: அன்பு மன்னிப்புக் கேட்கும்!

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), ஆங்கில மொழியில் எழுதி, உலகெங்கும் அவருக்கு மிகுபுகழ் ஈட்டித் தந்த திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்னும் நூலில், திராவிட மொழிகள் (தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலியன) ஒரு மொழிக் குடும்பத்திலிருந்து (மூத்த திராவிட மொழியான தமிழிலிலிருந்து?) உதித்திருக்கலாம் என்று ஆய்ந்து நிறுவியிருப்பது, இன்று வரை பிற ஆய்வுகளின் மூலம் மறுக்கப்படவில்லை. கால்டுவெல் கருத்து நிலைத்திருக்கிறது.

இவ்வுண்மையை ஒட்டியே, 1891இல் மனோன்மணீயம் நூலெழுதிய பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, தனது நூலில், தமிழ்த்தாய் வாழ்த்தாக அமைத்துள்ள ’நீராரும் கடலுடுத்த...”என்று தொடங்கும் முழுப்பாடலில் –

“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!”

என்று வியந்து பாடியுள்ளதையும் அறிவோம்.

அறிஞர் கால்டுவெல், பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை ஆகிய முன்னோர்களது ஆய்ந்து தெளிந்த  கருத்துகளின் தொடர் தாக்கங்களால்கூட- ‘’தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது’’ என்ற ஒற்றைவாக்கியம் பேச்சுவாக்கில் நடிகர் வாய்மொழியாக உதிர்ந்திருக்கலாம் என யாரும் உணரக் கூடும். குறிப்பிட்ட கருத்தைச் சொல்வதற்கு - நீதிபதி நாகபிரசன்னா வினவியிருப்பதுபோல - ஒருவர் மொழியியல் ஆய்வாளராகவோ, வரலாற்று வல்லுநராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. கால்டுவெல் நூலை, சுந்தரம் பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்தை அரசல் புரசலாக அறிந்திருந்தாலே போதும். எந்தச் சாதாரணனும் அக்கருத்தைக் கூறும் வாய்ப்ப்புகள் நிறைய உண்டு.

II

‘மன்னிப்பு’ என்ற சொல் முதல்பார்வையில், மிகவும் எளிமையானதாக, நேரடியானதாகத் தோன்றும். ஆனால் அது சிக்கலான உட்பொதிவுகள் கொண்டது. மன்னிப்பு உண்மையாகக் கேட்கப்படுகிறதா? வழங்கப்படுகிறதா?(கேட்கப்படுவதும், வழங்கப்படுவதும் மன்னிப்பு என்ற ஒரு சொல்லால் குறிக்கப்படுகிறது என முன்பே குறிப்பிட்டுவந்துள்ளோம்.) மன்னிப்புக் கேட்குமாறு ஒருவர் மற்றொருவரைக் கோர முடியுமா? மன்னிப்பு என்பது சட்டம் சம்பந்தப்பட்டதா? ஒழுங்குபடுத்தப்பட்ட மன்னிப்பு (Regulated apology) ஒரு மன்னிப்பா? உளவியல், சமூகவியல், தத்துவம் மற்றும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்து இத்தகைய கேள்விகள் மன்னிப்பைச் சூழ்கின்றன.

சட்டம் பாரம்பரியமாக மன்னிப்பை ஒரு சமூக, தார்மிகச் செயலாகத்தான் கருதுகிறது, ‘மன்னிப்பு’ என்பது நடைமுறைப்படுத்தக் கூடிய சட்டத்தீர்வுகளின் எல்லைக்கு வெளியே உள்ள ஒரு பொருட்பாடாகும். “மன்னிப்பு” குறித்து எந்த சட்டபூர்வ விளக்கமும் நம்மிடையே இல்லை. ஆனாலும், மன்னிப்பு குறித்து பல தீர்ப்புகளில் கருத்துகள் வெளிவந்துள்ளன.

எடுத்துக்காட்டாக, இந்திய உச்சநீதிமன்றத்தில் (உரிமையியல் மேல்முறையீட்டு அதிகார வரம்பு அவமதிப்பு மனு எண்118/2007 சிறப்பு முறையீட்டு மனு (சி) எண்.19924/2006 சி. ஏழுமலை மற்றும் சிலர்.. (மனுதாரர்கள்) எதிர் ஏ.ஜி.எல். இருதயராஜ் மற்றும் சிலர் …. (பிரதிவாதிகள்) என்ற வழக்கில்) நீதிபதி டாக்டர் அரிஜித் பசாயத், மார்ச் 20, 2009 இல் வழங்கிய தீர்ப்பில்:

“மன்னிப்புக் கேட்பது என்பது உண்மையான வருத்தத்தின் செயல். வாய்ப்புக் கிடைக்கும் முதல் நிலையிலேயே விரைந்து தானே மன்னிப்புக் கேட்டாலொழிய, மன்னிப்புக் கேட்பது என்பதே ‘ஒப்புக்குத்தான்’ என்றாகிவிடும்; அது நிராகரிக்கப்படும். நீதிமன்றம் கண்டிக்கிறது; தண்டனை வழங்கப் போகிறது என்ற நேரத்தில் மன்னிப்புக் கேட்பது ‘கூச்சலிடும் கோழையின் செயலாக’த்தான் இருக்கும்’’ என்றும் அத்தீர்ப்பில் விளக்கப்பட்டுள்ளது.

மேலும், ”மன்னிப்பு என்பது குற்றம் செய்தவர்களை விடுவிக்கும் சர்வரோக நிவாரணியல்ல; அது தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள ஏதுவான தற்காப்பு ஆயுதமும் அல்ல, அது உண்மையான வருத்தத்தின் நிறை சான்றாக இருக்க வேண்டும் என்றும் அத்தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

“கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு, மன்னிப்புக் கேட்கிறேன், மன்னித்து மறந்து விடுங்கள்” என்று அறைந்தவர் பாசாங்குத் தனமான வார்த்தையை உச்சரிப்பதை நீதிமன்றம் ஏற்காது. ‘’மன்னிப்பு என்பது காகித மன்னிப்பாக இருக்கக் கூடாது, துயரத்தின் வெளிப்பாடு இதயத்திலிருந்து வர வேண்டும், பேனாவிலிருந்து அல்ல என எல்.டி. ஜெய்க்வால் எதிர் உ.பி. மாநிலம் [1984 (3) எஸ்.சி.சி 405] வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோன்ற ஒரு கருத்து நிலைப்பாடு டி.வி. கோதவர்மன் திருமல்பாட், வி. அசோக்கோட் மற்றும் மற்றொருவர் [2006 (5) SCC 1] வழக்கின் தீர்ப்பிலும் காணப்படுகிறது.

சமுதாய நோக்கில், மன்னிப்பு (Forgiveness) என்பது மிக உயர்ந்த மனித நற்பண்பு; அதைப் பழக்கமாக்கிக் கொள்ளவேண்டியது அவசியமென முன்னோர்களும் அறநெறிகளும், நூல்களும் மக்களுக்குப் போதிக்கின்றன. நன்றல்லதை அன்றே மற’ என அறிவுறுத்தல்களும், ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற வழிகாட்டுதல்களும் நம்மிடையே நிலைபெற்றுள்ளன. மன்னிப்பது மேன்மைநிறை தனிமனித, சமூகக் கருணை (To Forgive is divine) என்றும் சமுதாயத்தில் மதிக்கப்படுகிறது.

தவறுணர்தல், தவறுக்கு வருந்துதல், தவறுக்குப் பொறுப்பேற்றல் முதலியன ‘மன்னிப்பு’ (Apology) என்பதன் உட்பொதிவுகளாகும். தவறுக்கு வருந்தித் தாமதமின்றி ‘மன்னிப்புக் கோருதல்’, மன்னிப்பு வழங்குதலுக்கு ஈடான (தெய்வீக) நற்பண்பு எனச் சமுதாயக் குழுக்களால்  போற்றி மதிக்கப்படுகிறது.

பெரும்பாலான தத்துவஞானிகள், மன்னிப்புக் கேட்பது என்பதில், மன்னிப்புக் கேட்கும் நபர் வருத்த உணர்ச்சிகளைத் தன்னுள் வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். வருத்தமிலாத மன்னிப்பு உயிரற்ற உடல் என நம்புகிறார்கள். மன்னிப்புக் கேட்பதில் நேர்மை முக்கியமானது, மேலும் எதிர்காலத்தில் அதே பிரச்னையை ஏற்படுத்தக் கூடாது என்ற நம்பகமான உறுதிப்பாடும் அதில் அடங்கவேண்டும்.

மன்னிப்புக் கேட்பதுஎன்பது பேச்சாலோ, செயலாலோ, "மற்றொருவருக்கு அவமதிப்பு, காயம், வலி, இழப்பு, அநீதி, தவறுபோன்ற ஏதேனும்  இழைத்த / இழைத்ததாகக் கருதப்பட்ட பேச்சு, செயலுக்கு அல்லது செயலின்மைக்கு - நியாயப்படுத்துதல் அல்லது விளக்கம் எதுவும் இல்லை என முழுமையாக ஒப்புக்கொண்டு – வருந்தி, தானாக முன்வந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்பதாகும். சுருக்கமாக, ‘மன்னிப்புக் கேட்டல்’ என்பது ஏதேனும் தவறு செய்ததற்கு (?) வருந்துவதை ஒருவர் மற்றவர்க்குத் தெரிவிக்கும் ‘தொடர்புமொழி அல்லது செயல்’ எனச் சொல்லலாம்.

அத்தகையத் தொடர்பு மொழி அல்லது செயலென்பது நிகழ்ந்த / நிகழ்ந்ததாகக் கருதப்படும்  தீங்கு மற்றும் அதன் விளைவுகளுக்குத் தார்மிகப் பொறுப்பேற்பது; இழப்படைந்தவர் /பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீங்கு விளைவித்ததற்காக உளமார்ந்த வருத்தம் தெரிவிப்பது; பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கத்தக்க இழப்பீடு அல்லது பிற உதவிகள், முயற்சிகளை வழங்க முற்படுவது; தீங்குவிளைவிக்கும் நடத்தையை மீண்டும் செய்யமாட்டேன் என்று உறுதியளிப்பது என்ற அனைத்தையும் உட்பொதித்திருந்தால்தான், முழுமையான, உண்மையான, நேர்மையான மன்னிப்புக் கோருதலாகும். மன்னிப்புக் கேட்டலென்பது, தவறு செய்யப்பட்டுள்ளதை மன்னிப்புக் கேட்பவர் ஒத்துக்கொள்வதாகப் பெரும்பாலும் கருதப்படுவதால்தான் மன்னிப்புக் கேட்கப் பொதுவாகத் தயக்கங்கள் நிலவுகின்றன.

சட்டத்தின் சூழல்களில் வைத்து ‘மன்னிப்பை’ அலசும்போது, நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டை தீர்ப்பதில், ஒரு நபர், தமது பேச்சு, செயல் ஏதேனும் தவறு என்று ஒப்புக்கொண்டு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டால், நீதிமன்றம் அத்தகைய மன்னிப்பைக் கருத்தில்கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. ஆனாலும் மன்னிப்பை ஏற்க வேண்டும் என நீதிமன்றத்திற்கு எந்தக் கடப்பாடும் கிடையாது. ஆகவே, கோரப்படும் மன்னிப்பை ஏற்பதும் ஏற்க மறுப்பதும் நீதிமன்றத்தின் சுயதேர்வாகும்.

ஒரு குறிப்பிட்ட பேச்சு அல்லது செயலுக்காக மன்னிப்புக் கேட்பது சரியானதாக / பொருத்தமானதாக இருக்கலாம்; தவறான அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பேச்சுகள், செயல்களின் விளைவாக ஏற்படும் இழப்பை அது குறைக்கக் கூடும். என்றாலும் தவறுசெய்தவர்கள் அல்லது தவறு செய்ததாகக் கருதப்படுபவர்கள் தாமாக முன்வந்து மன்னிப்புக் கேட்க விரும்பவில்லை என்றால் மன்னிப்புக் கேட்குமாறு கட்டாயப்படுத்த நீதித்துறை அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குத் தெளிவான, புரிந்துகொள்ளக்கூடிய வழிவகைகள் (Provisions) எந்தச் சட்டத்திலும் தென்படவில்லை.

அடிப்படையாகப் பார்த்தோமானால், ஒருவரை மன்னிப்புக் கேட்க உத்தரவிடுவதைச் சுற்றிப் பல கவலைகள் சூழ்ந்தெழுகின்றன. ஒருவர் தானாக முன்வந்து மன்னிப்புக் கேட்காவிட்டால், கட்டாயத்தின்பேரில் மன்னிப்பை வெளிப்படையாகக் கேட்கச் சொன்னால் அவர் உண்மையில் வருத்தப்படுகிறாரா என்பதை நீதிமன்றம் எப்படி அறிய முடியும்? சுதந்திரமாகவும் தன் விருப்பத்துடனும் கேட்கப்படாத / வழங்கப்படாத மன்னிப்பு ஒரு மன்னிப்பா? அதற்கு ஏதேனும் மதிப்பு இருக்கிறதா? 

எல்லாவற்றிற்கும் மேலாக, மன்னிப்புக் கேட்குமாறு சொல்லப்படுதலிலுள்ள (வாய்மொழி அல்லது எழுத்துமூல உத்தரவின்) கட்டாய இயல்பு, கட்டாயப்படுத்தப்படுவரின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் நிலை மிகவும் கவலையளிப்பதாகும். அந்நிலை அரசமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைப் பேற்றைக் காலால் இடறும் நிலையன்றோ?

நம் நாட்டின் அரசமைப்புச்சட்டம் மனித உரிமைகளின் ஊற்றுக்கண்களாக விளங்கும் விரிவான பல உரிமைகளின் தொகுப்பை அரசமைப்புச் சட்டத்தின் பகுதி III இல் அடிப்படை உரிமைகள் எனுந் தொகுதியில் அமையச் செய்துள்ளது.

தலையானவை் எனக் கருதப்படும் ‘சமன்மைக்கான  உரிமை’ (அ.ச.பிரிவு 14) ‘சுதந்திரச் செயல்பாட்டு உரிமைப் பேற்றுக்கான உரிமைகள்’ (அ.ச.பிரிவு 19) எனும் பகுப்பில் வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளில் முதன்மையான பேச்சுரிமை[அ.ச.பிரிவு 19(1)(a)](பேச்சுரிமைப் பேற்றுக்கு, மற்றும் சிந்தனை வெளிப்பாட்டு உரிமைப் பேற்றுக்கு) வழங்கப்பட்டிருப்பது மிக விசாலமான உரிமைப்பேறுகளாகும்.

அவ்வுரிமை மிக விசாலமானதென்பதை நடைமுறை அனுபவம் குடியரசின் தொடக்கத்திலேயே உணர்த்தியதால்தான் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஓராண்டிலேயே முதல் திருத்தம் (1951) கொண்டுவரப்பட்டு பேச்சுரிமைக்குத் ‘தகவான வரம்புகள்’ (Reasonable restrictions) நிர்ணயிக்கப்பட்டது.

பேச்சுரிமையின் விசாலத்திற்கு, முதல் திருத்தத்தின் மூலம், அ.ச.பிரிவு 19 (2) விதித்திருக்கும் ‘தகவான வரம்புகள்’ (‘நியாயமான கட்டுப்பாடுகள்’) எந்தெந்த வகைப்பாடுகளில் இருக்கலாம் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. அவ்வரையறையின்படி, “இந்தியாவின் பேரரசாண்மை மற்றும் ஒருமைப்பாடு, அரசின் ஏமக்காப்பு, அயல்நாட்டு அரசுகளுடன் நட்பு உறவு,  நயப்பாடு அல்லது ஒழுக்க நெறியின் நலன்கள் பொருட்டு அல்லது நீதிமன்ற இகழ்வு, பழிப்பு அல்லது ஒரு குற்ற செயலுக்குத் தூண்டுதல் தொடர்பாக ’’பேச்சுரிமையின் மீது தகவான வரையறைகளைச் சுமத்தலாம் என்று மட்டுமே உள்ளன.

ஆகவே, ஒருசாரரது “மனம் புண்பட்டிருக்கிறது”, “உணர்வுகள் காயம் பட்டுள்ளன” என்ற புறக் காரணங்கள் கூறி, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி தன் முன்னுள்ள மனுதாரரை மன்னிப்புக்கோர வற்புறுத்துவது என்பதெல்லாம் பேச்சுரிமையின் விசாலப் பரப்பை நியாயமாகக் குறைக்கும் தகவான வரையறைக்குள் வராது. நீதிபதி வலியுறுத்தியது அரசமைப்புச் சட்டத்தின் ஏற்பாட்டிற்கு முரணானது. மன்னிப்புக் கோருவது எப்போதும் தனிமனிதரின் விருப்பத்தேர்வாக மட்டுமே இருக்க முடியும். ஒரு மக்களாட்சிக் குடியரசில் அவ்வாறு இருப்பதே தகவு, பெருமை, அவசியம்.

இதே கருத்தினை உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சஞ்சய்  ஹெக்டே தனது கட்டுரையொன்றில் (த ஹிந்து, ஜூன் 9, 2025) குறிப்பிட்டுள்ளது மகிழ்வளிக்கிறது. நீதிமன்றங்கள் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்திற்கு முதன்மையளித்து அதனைப் பாதுகாக்க ஆர்வமுடன் முன்வர வேண்டுமேயொழிய, அதனை ஒடுக்குவதற்கான புறக்காரணிகளைத் தேடி, கருத்துக் கூறிய ஒருவரை மன்னிப்புக்கோரப் பரிந்துரைப்பது தகவானதாக இருக்காது எனவும் ஹெக்டே தனது கட்டுரையில் வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிட உரியது.

புகழ்பெற்றுள்ள சமூகவியலாளர் நிக்ஸ்மித் குறிப்பிடுவதுபோல், சில மன்னிப்புக் கோரல்களில் "மன்னிப்பு இருக்கிறதா இல்லையா" என்பதே ஆராய உரியதாகிவிடுகிறது உண்மையாகவே தேவைப்படும் சூழல்களில், ஒரு முழுமையான, அர்த்தமுள்ள, நம்பகமான அல்லது திட்டவட்டமான மன்னிப்பு என்பது தானே வருவதாகவே இருக்குமேயன்றி, ஒருபோதும் கேட்டு, வற்புறுத்தி, மிரட்டிப் பெறுவதில் இருக்காது; இருக்கவும் முடியாது.

சுதந்திரமாகவும், விருப்பத்துடனும் ஒருவர் தானாக முன்வந்து மன்னிப்புக் கேட்காவிட்டால், அது மன்னிப்பா? கட்டளையிட்டு மன்னிப்புப் பெறுவதில் ஏதேனும் மதிப்பு இருக்கிறதா?அவ்வாறு பெறும் மன்னிப்பில், அவர் உண்மையாக வருத்தப்படுகிறாரா என்பதை நாம் எப்படி அறிவது?

செயல்படுத்தக்கூடிய நீதிமன்ற உத்தரவின் கட்டாய இயல்பு மன்னிப்புக் கேட்குமாறு வற்புறுத்தப்படுபவரின் கருத்து சுதந்திரத்தில் தலையிடுவது பற்றிய கவலைகள் பற்றி அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் கடப்பாடுக் கொண்டிருக்கும் நீதிமன்றங்கள் கருத வேண்டாமா?

மன்னிப்பின் குறிக்கோள் பொதுவாக சமரசம் மற்றும் ஒரு சர்ச்சையில் ஈடுபட்டுள்ள மக்களிடையேயான உறவை மீட்டெடுப்பதாகும். அதேசமயத்தில் கட்டாய மன்னிப்பு கேட்பதற்கு எந்த மதிப்பும் இல்லை என்பதும் மிக முக்கியமானது. நன்கு அறிந்து தீர்க்கமுடன் செயல்பட வேண்டிய விஷயம்.

**

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்]

இதையும் படிக்க: மாநிலக் கல்விக் கொள்கை மறைந்து கிடப்பது ஏன்?

சிபில் ஸ்கோர் அடிப்படையில் வேளாண் கடன் உத்தரவை திரும்பப் பெறுக: சீமான் வலியுறுத்தல்

வேளாண்மையை அழித்தொழிக்கும் வகையில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் இனி நுகர்வோர் கடன் மதிப்பெண் (சிபில் ஸ்கோர்) அடிப்படையில் கடன் வழங்கப்படும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டு... மேலும் பார்க்க

கும்பகோணம் அருகே மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு!

கும்பகோணம் அருகே பம்பபடையூர் கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் முன்பு திடீரென அதிக சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பம்பபடையூர் கிர... மேலும் பார்க்க

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

காஞ்சிபுரம் அருகே 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி சிறுவர்கள் இருவர் உள்பட மூன்று பேரை காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.காஞ்சிபுரம் மாவட்... மேலும் பார்க்க

மதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா?: நயினார் பதில்

திருநெல்வேலி: திமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, மதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோமா என்பதை இப்போது கூற முடியாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகே... மேலும் பார்க்க

தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள புகழ்பெற்ற தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் யுனெஸ்... மேலும் பார்க்க

திருத்தணி அருகே காங்கிரஸ் பிரமுகர் கொலை

திருத்தணி: திருத்தணி அருகே காங்கிரஸ் பிரமுகரும் நெசவுத் தொழிலாளியுமான ராஜேந்திரன் மர்மநபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அம்மையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ர... மேலும் பார்க்க