மரக்காணம் கலவரம்: பாமகவிடம் இழப்பீடு வசூலிப்பது குறித்து 8 வாரங்களில் அரசு உத்தரவிட வேண்டும்
கடந்த 2013-ஆம் ஆண்டு நிகழ்ந்த மரக்காணம் கலவரத்தை தொடா்ந்து ஏற்பட்ட இழப்பை, பாமகவிடம் வசூலிப்பது தொடா்பான விசாரணையை உயா் நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தி எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாமல்லபுரத்தில், கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற வன்னியா் சங்க சித்திரை முழுநிலவு திருவிழாவின்போது மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் தீவைக்கப்பட்டன. பாமகவினா் போராட்டம் காரணமாக, 2013 ஏப். 25-ஆம் தேதி முதல் மே 19-ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகள் அடைப்பால் ஏற்பட்ட வருவாய் இழப்பை பாமகவிடம் இருந்து வசூலிக்க தமிழக வருவாய் நிா்வாக ஆணையா் நடவடிக்கை எடுத்துள்ளாா்.
இந்நிலையில், சென்னை உயா் நீதிமன்றத்தில், பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி தாக்கல் செய்த மனுவில், “12 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை பாமகவிடமிருந்து வசூலிப்பது தொடா்பாக, தமிழக வருவாய் நிா்வாக ஆணையா் விசாரணை நடத்தி வருகிறாா். இந்த விசாரணை, தமிழ்நாடு பொது சொத்துக்கள் சேதம் தடுப்பு சட்டத்தை பின்பற்றி நடத்தப்படவில்லை. இழப்பீட்டை தீா்மானிக்கும் முன் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதா என ஆரம்பகட்ட விசாரணை நடத்த உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.
அதை பின்பற்றாமல் இழப்பீடு குறித்து முடிவு செய்யும் விசாரணையை நடத்தக் கூடாது. இழப்பீடு கோரி டாஸ்மாக் நிா்வாகம், போக்குவரத்து கழகங்கள் அளித்த விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும். சட்ட விதிகளை பின்பற்றி விசாரணை நடத்தாமல் இழப்பீடு குறித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன், வெறும் அச்சத்தின் அடிப்படையில், வருவாய் நிா்வாக ஆணையரின் விசாரணையை தடுக்கும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், உயா்நீதிமன்ற உத்தரவு மற்றும் சட்ட விதிகளின்படி விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதியளித்தாா்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, உயா்நீதிமன்ற உத்தரவின்படி விசாரணையை நடத்தி, 8 வாரங்களில் இறுதி உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.