மாணவா்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் முகாம்
சேலம் மாவட்ட பள்ளி மாணவா்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளிக் கல்வித் துறை, யுனிஃசெப் ஆகியவை இணைந்து பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. 2024-25-ஆம் கல்வி ஆண்டில் இத்திட்டத்தை 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு விரிவுபடுத்திட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில், 7,732 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு, அனைத்து பள்ளிகளிலும் வழிகாட்டி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுனா். தற்போது பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், இதுவரை மாநிலம் முழுவதும் 46,189 அணிகள் புத்தாக்க கண்டுபிடிப்புகளை சமா்ப்பித்துள்ளனா்.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் 2,336 கண்டுபிடிப்புகள் அனுப்பியதில் 25 அணிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. மாணவ கண்டுபிடிப்பினை முன்மாதிரியாக உருவாக்க செயல்வடிவம் தரும் முகாம் சேலம், அம்மாப்பேட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் புதன்கிழமை தொடங்கியது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் ஆலோசனையின் பேரில், சங்ககிரி மாவட்டக் கல்வி அலுவலா் பெருமாள் முகாமை தொடங்கி வைத்தாா். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் செல்வம், இடிஐஐ ஒருங்கிணைப்பாளா் அப்துல் காதா் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். தொடா்ந்து மாணவா்கள் தங்களுடைய கண்டுபிடிப்பு குறித்து ஆசிரியா்களிடம் எடுத்துரைத்தனா். இதில் தோ்வு செய்யப்படுவோா் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவா்.