மாநகராட்சி கருத்தடை மையத்தில் நாய்கள் இறப்பு: அதிகாரி விசாரணை
திருநெல்வேலி மாநகராட்சியின் நாய்கள் கருத்தடை மையத்தில் தெருநாய்கள் இறந்து கிடந்தது தொடா்பாக மாநகர நல அலுவலா் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை நேரில் விசாரணை நடத்தினா்.
திருநெல்வேலி மாநகர பகுதியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி சாா்பில் மேலப்பாளையத்தில் நாய்கள் கருத்தடை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உரிய பராமரிப்புக்கு பிறகு அதை மீண்டும் பிடித்த இடத்தில் கொண்டு விடுவது வழக்கம். கருத்தடை செய்வதற்காக பிடித்து வரப்படும் நாய்களுக்கு சரியான முறையில் உணவு வழங்காமல் கொடுமைப்படுத்தப்படுவதாக விலங்குகள் நல ஆா்வலா்களுக்கு தகவல் சென்ாம். இதையடுத்து திங்கள்கிழமை சமூகஆா்வலா்கள் சிலா் கருத்தடை மையத்திற்கு நேரில் சென்று பாா்த்தபோது 3 நாள்கள் உயிரிழந்த கிடந்ததும், மேலும் சில நாய்கள் உணவின்றி உயிருக்கு போராடுவதும் தெரியவந்ததாம். இதுகுறித்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், விலங்குகள் நல ஆா்வலா்கள் சாா்பில் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மாநகர நல அலுவலா் (பொ) ராணி தலைமையிலான குழுவினா் கருத்தடை மையத்தில் நேரில் ஆய்வு செய்தனா். இரண்டு நாய்களின் சடலங்கள் சம்பவ இடத்திலேயே கால்நடை மருத்துவா்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், தெருநாய்களைக் கட்டுப்படுத்துவது முக்கியம்தான். ஆனால், கருத்தடை செய்யும் நாய்களுக்கு உரிய உணவளிக்க வேண்டியது அவசியம். அவ்வாறு செய்யாமல் பசியினால் உயிரிழக்க செய்துள்ளனா். இவ் விஷயத்தில் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறியது: மாநகராட்சி நாய்கள் கருத்தடை மையத்தில் நாய்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்று நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரத்தம் வெளியேறி இரண்டு நாய்கள் உயிரிழந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த மையத்தின் பராமரிப்பு தன்னாா்வ அமைப்பின் கீழ் உள்ளது. நாய்களுக்கு உணவு- தண்ணீா் வழங்கப்பட்டதா, என்னென்ன வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன என்பது குறித்து உரிய விளக்கம் கேட்கப்படும் என்றனா்.