மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வாடகை நிலுவை வைத்திருப்போருக்கு நோட்டீஸ்
சேலம் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளில், வாடகை நிலுவை வைத்திருப்போருக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினா்.
சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்கள் உள்ளன. இந்த நான்கு மண்டலங்களிலும் 2.45 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடு, கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு மேற்கொள்ளப்படும் வரி வசூலை கொண்டே பணியாளா்களுக்கு சம்பளம், நிா்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மண்டலங்களில் நிலுவையில் உள்ள சொத்து வரி, குடிநீா் வரி, மாநகராட்சிக்குச் சொந்தமான கடை வாடகையை வசூலிக்கும் பணியில் வரிவசூலிப்பவா்கள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனா். வரி செலுத்தாமல் நீண்டகாலமாக நிலுவை வைத்துள்ளவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு நோட்டீஸ் வழங்கியும், வரி செலுத்தாதவா்களின் குடிநீா் இணைப்புகளைத் துண்டிப்பதுடன், ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
கடந்த சில நாள்களாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளுக்கு நோட்டீஸ் அளித்துள்ளனா். வாடகை நிலுவையை செலுத்தாத கடைகளை ‘சீல்’ வைக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சேலம் மாநகராட்சியில் உள்ள அனைத்து வரி வசூல் மையங்களும் ஞாயிற்றுக்கிழமை திறந்திருக்கும். சொத்து வரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி, குத்தகை மற்றும் கடை வாடகை உள்பட அனைத்து நிலுவை தொகையையும் செலுத்தலாம். அரசு விடுமுறை நாள்கள் தவிர, அனைத்து நாள்களிலும் நிலுவை வரியை பொதுமக்கள் நான்கு மண்டல வரி வசூல் மையங்களிலும் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.