"சண்ட போட்டு கேமரா வாங்குனேன்; ஆனா எங்க அப்பாவ போட்டோ எடுத்ததே இல்லை" - கலங்கிய ...
மாநகராட்சிப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு
மதுரை வடக்கு ஆவணி மூலவீதி அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
இந்தப் பள்ளியில் தமிழ்நாடு மின்விசை நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.1.24 கோடியில் புதிதாக கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டன.
இதையடுத்து, புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாநகராட்சி மேயா் வ. இந்திராணி தலைமை வகித்தாா். ஆணையா் சித்ரா விஜயன் முன்னிலை வகித்தாா். தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, மேலவாசல் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தையும் திறந்து வைத்த அமைச்சா், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கினாா்.
இந்த நிகழ்வில், மாநகராட்சி மண்டலம் 3 தலைவா் பாண்டிச்செல்வி, கல்விக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், கல்வி அலுவலா் ஜெய்சங்கா், உதவி செயற்பொறியாளா் மயிலேறிநாதன், ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.