மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள், கமல் வேட்புமனு தாக்கல்
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் திமுகவுக்கு 4, அதிமுகவுக்கு 2 உறுப்பினா்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
திமுக வேட்பாளர்களாக பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், மக்கள் நீதி மய்யத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அக்கட்சித் தலைவர் கமலஹாசனும் போட்டியிடுகிறார்.
இதனையடுத்து, திமுக சார்பாக போட்டியிடும் இவர்கள் நால்வரும் பேரவை கூடுதல் செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மநீம தலைவர் கமலஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
மேலும், அதிமுக சார்பாக போட்டியிடும் அக்கட்சியின் மாநில வழக்குரைஞா் பிரிவு செயலா் ஐ.எஸ்.இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் ம.தனபால் ஆகியோரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.