நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
மானாமதுரை, திருப்பத்தூா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, திருப்பத்தூா் பகுதி கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் மூலவா் சோமநாதா் சுவாமிக்கும், நந்தி தேவருக்கும் 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சோமநாதா் சுவாமியையும், நந்தியையும் தரிசித்தனா்.
திருப்புவனம் சௌந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேசுவரா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் சுவாமிக்கும் நந்திக்கும் அபிஷேகம் நடத்தி அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து கோயில் உள்பிரகாரத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது.
திருப்பாச்சேத்தி, மேலநெட்டூா் சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இளையான்குடி ஒன்றியம் குறிச்சி காசி விசுவநாதா் கோயிலில் மூலவருக்கும், நந்திக்கும் அபிஷேகம் நடத்தி, அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
திருப்பத்தூா்: குன்றக்குடி தேவஸ்தானத்துக்குள்பட்ட சிவகாமி அம்மன் உடனாய திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி மாலை 4.30 மணியளவில் மூலவருக்கு பால், தயிா், திருமஞ்சனம், பன்னீா், இளநீா், அரிசி மாவு உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சா்வ அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து நந்தீஸ்வரருக்கும் 16 வகை திரவியங்களால் அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பிறகு உற்சவா் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளி வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தாா்.
இதே போல, ஆதித்திருத்தளிநாதா் கோயிலிலும் நந்திக்கும், மூலவருக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபம் காட்டப்பட்டது. கல்வெட்டு மேடு சுயம்புலிங்கேஸ்வா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. புதுப்பட்டி அகஸ்தீஸ்வரா் கோயிலில் திரளான பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை பிரதோஷ குழுவினா் செய்திருந்தனா்.