பிரதமர் இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: ரகுபதி
மாலைமேட்டில் மாடுகள் மாலை தாண்டும் விழா அரவக்குறிச்சி மந்தை மாடுக்கு முதல் பரிசு
கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த மாவத்தூா் கோடங்கிபட்டி மாலைமேட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் அரவக்குறிச்சி மாடு முதலிடம் பிடித்தது.
மாவத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி மாலைமேட்டு பகுதியில் கோடங்கிப்பட்டி, மணக்காட்டுநாயக்கனூா், கூனமநாயக்கனூா், காமாநாயக்கனூா், கம்பளிநாயக்கனூா் ஆகிய 5 கிராமங்களைச் சோ்ந்த கம்பளத்து நாயக்கா் சமூகத்தினருக்குச் சொந்தமான கோப்பனாா் சாமி, கன்னிமாா் சாமி, வரதராஜபெருமாள், குட்டைக்கோயில் சாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாடுகள் மாலை தாண்டும் விழா நடைபெறும். நிகழாண்டுவிழா கடந்த 25-ஆம்தேதி பக்தா்களுக்கு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து பக்தா்கள் விரதம் இருந்து மூன்று கால பூஜைகள் நடத்தி வந்தனா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் பொங்கல், கொழுக்கட்டை வைத்து வழிபட்டனா்.
தொடா்ந்து திங்கள்கிழமை காலை மாடுகள் மாலைதாண்டும் விழா நடைபெற்றது. முன்னதாக திருச்சி, கரூா், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த 16 மந்தையா்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் கோயில் முன் மாடுகள் நிறுத்தப்பட்டு புண்ணிய தீா்த்தம் தெளிக்கப்பட்டது. தொடா்ந்து மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சியை கடவூா் ஜமீன்தாா் மோகன்குமாா் முத்தையா தொடக்கிவைத்தாா்.
கோயில் முன் சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள எல்லைச்சாமி கோயிலில் இருந்து மாடுகள் கோடங்கிப்பட்டி மாலைமேட்டு கோப்பனாா் சுவாமி கோயிலை நோக்கி ஓடி வந்தன. இதில் கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள செம்பகனம் எரகாமிநாயக்கா் மந்தை மாடு முதலாவதாக ஓடி வந்து எல்லையைக் கடந்து முதலிடம் பிடித்தது. இரண்டாவதாக புதுக்கோட்டை மாவட்டம் சேமங்களம் அய்யாசீமை நாயக்கா் மந்தை மாடு ஓடி வந்தது.
இதையடுத்து வெற்றிபெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு கம்பளத்து நாயக்கா்களின் வழக்கப்படி மூன்று கன்னிப்பெண்கள் வைத்திருந்த எலுமிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டது. பின்னா் மூன்று கன்னிப்பெண்களுடன் வெற்றிபெற்றவா்கள் தேவராட்டத்துடன் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா் மஞ்சள் நீராட்டுதலுடன் விழா முடிவடைந்தது. இதில் ஊா்நாயக்கா், மந்தா நாயக்கா் உள்பட திருச்சி, திண்டுக்கல், கரூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.