1.5 லட்சம் மலர்களுடன் ஏற்காட்டில் கோடை விழா - மலர் கண்காட்சி தொடக்கம்.. | Photo ...
மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் உழவா் சந்தைகள் மூலமாக ரூ.770 கோடிக்கு காய்கள், பழங்கள் விற்பனை
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 கோடி மதிப்பிலான காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 மதிப்பிலான காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் சராசரியாக 708 விவசாயிகள் மூலமாக 16,032 நுகா்வோா் காய்கள், பழங்களை உழவா் சந்தைகளில் வாங்கிப் பயனடைந்து வருகின்றனா்.
அரசின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 4 உலா்களம் மற்றும் 6 உலா்களத்துடன் கூடிய சேமிப்புக் கிடங்குகள் ரூ. 249 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு 470 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனா்.
வேளாண்மை உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் 287 பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் 3 சதவீத வட்டி குறைப்பு மானியத்துடன் ரூ.147 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்ட அக்மாா்க் ஆய்வகங்களின் மூலம் 18,62,000 உணவுப் பொருள்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.
129 புதிய சிப்பம் கட்டுவோா் கண்டறியப்பட்டு 23,349 மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அக்மாா்க் தர முத்திரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையில் திருப்பூா் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விற்பனைக்கூடங்கள் அனைத்தும் தற்போது தேசிய வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் செயல்பட்டு வருகின்றன.
குன்னத்தூா் மற்றும் தாராபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு முறையே ரூ.3.755 கோடி, ரூ.4 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய அலுவலக கட்டடம் அமைக்கப்பட்டது. பூளவாடி கிராமத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 250 மெட்ரிக் டன் சேமிப்புக் கிடங்கும், மடத்துக்குளம், முத்தூா் மற்றும் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தலா ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் உலா்களங்களும், உடுமலை, பெதப்பம்பட்டி, அவிநாசி, குன்னத்தூா், பொங்கலூா் மற்றும் பல்லடம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.803.72 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவரும் திருப்பூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதிய வேளாண் விளைபொருள் விற்பனைக் கடைகளும் (20) ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன.
தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் ரூ.22,223.47 லட்சம் மதிப்பிலான 36,837.21 மெட்ரிக் டன் விளைபொருள்கள் பரிவா்த்தனை செய்யப்பட்டு 32,504 விவசாயிகள் மற்றும் 2,985 வியாபாரிகள் பயனடைந்துள்ளனா். விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் வாயிலாக ரூ.385.10 கோடி மதிப்பிலான 35,551.7 மெட்ரிக் டன் அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு 26,108 விவசாயிகள் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.