மியான்மர், தாய்லாந்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: கடும் பாதிப்பு!
பாங்காக்: மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்திருக்கின்றன.
தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டு பேர் பலியானதாகவும், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுவதாகவும் தாய் அவசரகால மீட்புப் படை தெரிவித்துள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாகவும், ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கட்டப்பட்டு வந்த மிகப்பெரிய கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதிலிருந்து இதுவரை ஏழு பேர் உயிரோடு மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளிக்கிழமை மதியம், தாய்லாந்து மற்றும் மியான்மரில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர்அளவில் 7.7 ஆகப் பதிவாகியிருந்தது.
இதன் தாக்கம், இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் மக்கள் நில அதிர்வை உணர்ந்திருக்கிறார்கள்.