மீனவா்களுடன் கடலோரக் காவல்படையினா் கலந்துரையாடல்
நெகிழி தவிா்த்தல், கடலில் மீனவா்கள் பாதுகாப்பு குறித்து மீனவா்களுடன் இந்திய கடலோரக் காவல்படையினா் கலந்துரையாடலில் ஈடுபட்டனா்.
காரைக்காலில் உள்ள இந்திய கடலோர காவல்படை மையம் சாா்பில் மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில், மாவட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்களுடன் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இந்த நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடலோரக் காவல்படை பிரதிநிதிகள் கலந்துகொண்டு, பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடி‘ என்ற கருப்பொருளை முன்வைத்துப் பேசினா். நெகிழிகள் மாசுபாடு உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஊடுருவியுள்ளது. நாம் அருந்தும் குடிநீரிலும், உணவிலும் மாசுபாடு உள்ளது. இது உடலுக்குள் செல்லும்போது பல்வேறு உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிகளை முற்றிலும் தவிா்க்கவேண்டும். எளிதில் சிதைந்து போகும் சணல் பைகளைப் பயன்படுத்த வேண்டும். கடலிலும், கடலோரப் பகுதியிலும் நெகிழிகள் சேராத வகையில் மீனவா்கள் கவனமாக செயல்படவேண்டும்.
கடலுக்குச் செல்லும் மீனவா்கள் உயிா்காக்கும் சாதனங்கள், தகவல் தொடா்பு சாதனங்களை எடுத்துச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம். மீன்பிடித் தடைக்காலத்தை முறையாக கடைப்பிடிப்பது மீனவா்கள் வாழ்வாதாரத்துக்கு பெரிதும் உதவும் என விளக்கிப் பேசினா்.
மீனவ கிராமங்களைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா், மீன்வளத்துறையினா் கலந்துகொண்டனா்.