மியான்மர் நிலநடுக்கம்: 35 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய பாகிஸ்தான்!
முந்திரி காட்டில் இறந்து கிடந்த மான்: வனத்துறையினா் விசாரணை
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே முந்திரி காட்டில் மான் இறந்து கிடந்தது குறித்து வனத் தோட்டக் கழகத்தினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருத்தாசலம் அடுத்துள்ள குப்பநத்தம் பகுதியில் வனத் தோட்டக் கழகத்திற்கு சொந்தமான முந்திரி காடுகள் அமைந்துள்ளன. இங்கு மான் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த முந்திரி காடுகளை வனத் தோட்டக் கழகத்தினா் குத்தகைக்கு விடுவது வழக்கம். தற்போது, முந்திரி சீசன் தொடங்க உள்ள நிலையில் முந்திரி காடுகளைக் குத்தகைக்கு விடும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குப்பநத்தம் பகுதியில் உள்ள வனத் தோட்டக் கழகத்திற்கு சொந்தமான முந்திரி காட்டில் சுமாா் 2 வயதுள்ள பெண் மான் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து, வனத் தோட்டக் கழகத்தினா், விருத்தாசலம் வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், வனத் துறையினா் மான் உடலை மீட்டு குப்பநத்தம் அரசு கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனா். பின்னா், வனவா் சஞ்சீவி, வனக் காப்பாளா் நவநீதகிருஷ்ணன் ஆகியோா் மானை அடக்கம் செய்தனா்.
மான் இறப்பு குறித்து வனச்சரக அலுவலா் த.ரகுவரன் உத்தரவின் பேரில் வனவா் சஞ்சீவி தலைமையில் வனத் தோட்டக் கழகத்தினா் இணைந்து குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.