'மும்மொழிக் கொள்கைக்காக ரெய்டு; குழந்தைகளிடம் கையெழுத்தே வாங்கக் கூடாது' - உதயநிதி ஸ்டாலின்
மும்மொழிக் கொள்கைக்காக தமிழகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டப் பணிகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று(மார்ச் 7) நடைபெற்றது.
அரசின் நலத் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக எளிதாக சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பிரதமரின் நிகழ்ச்சிக்கு முதல்முறையாக பாதுகாப்புப் பணியில் முழுவதும் பெண்கள்!
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய உதயநிதி,
"மும்மொழிக் கொள்கைக்காக தமிழகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஆதரிக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் ஏஜெண்டான அமலாக்கத் துறையை வைத்து மத்திய பாஜக அரசு சோதனை மேற்கொள்கிறது. திசைதிருப்புவதற்கான ஒரு வழியாகவும் இது இருக்கலாம்.
இதுபோன்ற பல சோதனைகளை நாங்கள் பார்த்துவிட்டோம். சோதனை முடிந்தபிறகு உண்மை எதுவெனத் தெரியும்" என்று கூறியுள்ளார்.
மேலும் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான பாஜகவின் கையெழுத்து இயக்கம் குறித்த பதிலளித்த உதயநிதி, "முதலில் குழந்தைகளிடம் கையெழுத்தே வாங்கக் கூடாது. நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கினோம். ஆனால், பள்ளி மாணவர்களைத் தவிர்த்துதான் மற்றவர்களிடம் வாங்கினோம். ஏற்கெனவே பாஜகவினர் 'மிஸ்டு கால்' கொடுத்து ஒரு கோடி பேரைச் சேர்த்தார்கள். அதன் தொடர்ச்சியாக இதனை பார்க்கிறோம்" என்று கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை நேற்று(மார்ச் 6) சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | குழந்தை குண்டாக இருக்கிறதா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!