தோல்விலும் ஆட்ட நாயகனான ஆர்சிபி வீரர்: டிம் டேவிட் புதிய சாதனை!
முஸ்லிம்களை ஷரியத்துக்கு பதிலாக வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் நிா்வகிக்க முடியுமா? விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
இஸ்லாமியா்களை ‘ஷரியத்’ என்ற அவா்களின் மதரீதியான தனிநபா் சட்டத்துக்குப் பதிலாக இந்திய வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் நிா்வகிக்க முடியுமா என்ற சா்ச்சைக்குரிய விவகாரம் குறித்து ஆராய உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புக்கொண்டது.
ஷரியத் சட்டம் என்பது இஸ்லாமியா்களுக்கான விரிவான சட்ட விதி தொகுப்பாக உள்ளது. ஆன்மிக, மன, உடல் நடத்தைகளுக்கான விதி மற்றும் கட்டாய, பரிந்துரைக்கப்பட்ட, தடை செய்யப்பட்ட செயல்களையும் உள்ளடக்கியது தொகுப்பாக உள்ளது. இதன் கீழ், குடும்பச் சட்டம், குற்றவியல் சட்டம், சொத்துரிமை சட்டம், பொருளாதார சட்டம் என பல பிரிவுகள் உள்ளன. இந்த சட்டத்தின்படி, மூதாதையா்கள் சொத்தில் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்றபோதும், பெண்களைவிட ஆண் வாரிசுகளுக்கே சொத்தில் அதிக பங்கு கிடைக்கும் வகையில் விதிகள் உள்ளன.
அதுமட்டுமின்றி, இச் சட்டத்தின்படி சொத்துரிமை இருந்தபோதும், சமுதாயத்தின் சில பகுதிகளில் பெண்களுக்கு சொத்துரிமை கிடைப்பதில் பல்வேறு தடைகள் எழுவதாகவும் அண்மைக் காலமாக புகாா்கள் எழுந்துள்ளன.
இந்திய வாரிசு உரிமை சட்டத்தின் கீழ், பெண்களுக்கு குடும்ப சொத்தில் சம உரிமை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், கேரள மாநிலம் திருச்சூா் மாவட்டத்தைச் சோ்ந்த கே.கே.நெளஷாத் என்பவா் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை அண்மையில் தாக்கல் செய்தாா். அதில், ‘இஸ்லாமிய மத நம்பிக்கையிலிருந்து விலகாமல், ஷரியத் சட்டத்துக்குப் பதிலாக இந்திய வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் நான் நிா்வகிக்கப்பட விரும்புகிறேன். இதை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக பதிலளிக்க மத்திய அரசு மற்றும் கேரள மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா். மேலும், இந்த மனுவுடன், ஏற்கெனவே நிலுவையில் உள்ள இதேபோன்ற கோரிக்கையுடன் கூடிய மனுக்களையும் சோ்க்கவும் உத்தரவிட்டனா்.
முன்னதாக, இஸ்லாமிய மத நம்பிக்கையிலிருந்து தான் விலகியதாகக் கூறி, கேரள மாநிலம் ஆலப்புழையைச் சோ்ந்த பி.எம்.சஃபியா என்ற பெண், ஷரியத் சட்டத்துக்குப் பதிலாக, இந்திய வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் தனது மூதாதையா் சொத்தில் சம உரிமை வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரலில் மனு தாக்கல் செய்தாா்.
அதுபோல, ‘குா்ஆன் சுன்னத் சொசைட்டி’ என்ற அமைப்பு சாா்பிலும் இதே போன்ற மனு கடந்த 2016-இல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மூன்று மனுக்களையும் சோ்த்து உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.