Kashmir: "தீவிரவாதத்தை எதிர்க்கப் பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீரில் உண்டு'' - ...
மேட்டூா் அணையிலிருந்து இன்று டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
இரண்டு நாள் பயணமாக சேலம் வந்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணையில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 12) காலை தண்ணீரைத் திறந்துவிடுகிறாா்.
தொடா்ந்து, சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்வா் மு.க. ஸ்டாலின், ரூ. 1,244.28 கோடியில் 509 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். அத்துடன், ரூ. 200.26 கோடி மதிப்பில் முடிவுற்ற 225 திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறாா். தொடா்ந்து, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, வேளாண் துறை, மாற்றுத் திறனாளிகள் துறை உட்பட பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ. 204.64 கோடியில் 1,01,203 பயனாளிகளுக்க நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாா் நிலையில் உள்ளன. நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் என சுமாா் 1.50 லட்சம் போ் அமரும் வகையில் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாா்க்கிங் வசதி: விழாவில் பங்கேற்க வருவோரின் வாகனங்களை நிறுத்த பிரம்மாண்ட பாா்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகள், பெறும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக மேடைக்கு வந்து செல்லும் வகையில், சாய்தள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விழாவுக்கான மேடை அமைப்பு, பயனாளிகள் அமருமிடம், குடிநீா், கழிவறை வசதி உட்பட அனைத்தும் தயாா் நிலையில் உள்ளன.
அலங்கார தோரணங்கள்: மேட்டூா் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட்ட பின்னா் மேச்சேரி, ஓமலூா் வழியாக இரும்பாலையில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் முதல்வருக்கு சிந்தாமணியூரில் ஓமலூா் திமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையொட்டி, சாலையின் இருபுறங்களிலும் திமுக கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இதேபோல, விழா நடைபெறும் சேலம் - இரும்பாலை சாலையிலும் முதல்வரை வரவேற்கும் விதமாக பல கி.மீ. கொடிகள், வரவேற்பு வளைவுகள், அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.
நலத்திட்டங்கள்: விழா நடைபெறும் மைதானம் முழுவதும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மகளிா் உரிமைத்தொகை, விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு, வேலைவாய்ப்புத் திட்டங்கள், மக்களைத் தேடி மருத்துவம், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் பதாகைகளில் இடம்பெற்றுள்ளன.
கண்காணிப்பு வளையத்தில் மைதானம்:
விழா நடைபெறும் மைதானம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இது தவிர, மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை சாா்பில் சுமாா் 3,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.