ரூ.1141.23 கோடியில் செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலை: முதல்வர் திறந்து வைத்தார்...
"மொழியை வைத்து அரசியல் செய்யும் நிலை இப்போது இல்லை" - மத்திய அமைச்சர் எல்.முருகன்
"தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது..." என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மதுரை வந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், "மத்திய அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. 2047 ஆண்டுக்கு அடித்தளமிட்டுள்ள வகையில் தொலை நோக்குப் பார்வையுடன் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக மக்கள் மீதும், தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாட்டின் மீதும் பிரதமர் மிகுந்த பற்று வைத்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் அரசியலுக்காக தவறான தகவல்களைப் பேசி மக்களைத் தவறான திசையில் திருப்புகிறார்.
பி.எம் ஸ்ரீ திட்டத்திற்கு முதலில் கையெழுத்து போட்டார்கள். திரும்பப் பின் வாங்கிவிட்டார்கள் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் மிகத் தெளிவாகச் சொல்லி உள்ளார். நிதி விவகாரத்தில் தமிழகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பைத் தருவதாக தர்மேந்திர பிரதான் என்னிடம் சொன்னார்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை?ஆரம்பக்கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். கல்வியாளர்கள், வல்லுநர்கள் ஆகியோர்களின் ஆலோசனையின் படி உருவாக்கப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை. இன்றைய காலகட்டத்தில் புதிய கல்விக் கொள்கை மிகவும் அவசியம். முன்பிருந்ததைப் போல இப்போது நாடு இல்லை. மக்கள் வளர்ச்சியை முன்னேற்றத்தை விரும்புகிறார்கள். மொழியை வைத்து அரசியல் செய்யும் நிலை இப்போது இல்லை.
நான் வெற்றிவேல் யாத்திரை நடத்தினேன். நான் திருப்பரங்குன்றம் செல்வதில் எந்த அரசியலும் இல்லை. சர்ச்சையும் இல்லை. என் வழிபாட்டு உரிமை அடிப்படையில் செல்கிறேன். கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் தேசிய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும்" என்றார்.