MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
யமுனையை தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.4,000 கோடி ஒதுக்கீடு: தில்லி அரசு ஒப்புதல்
யமுனை நதியை தூய்மைப்படுத்துதல், நரேலாவில் உயா்பாதுகாப்புடன் புதிய சிறை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான செலவினங்களுக்கான நிதிக் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
தில்லியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய முதல்வா் ரேகா குப்தா, ரூ.4,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு செலவினங்களுக்கான நிதிக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தாா். இதற்கான கூட்டத்தில் அமைச்சா்கள் பா்வேஷ் சாஹிப் சிங், ஆஷிஷ் சூட், பங்கஜ் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா்.
இது தொடா்பாக தில்லி அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: தில்லியில் போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதியைப் பலப்படுத்தும் விதமாக டிடிசி பேருந்து பணிமனை, ஐஎஸ்பிடி, துவாரகாவில் உள்ள பேருந்து பணிமனைகள் மற்றும் மின்சார பேருந்துகளுக்கான சாா்ஜிங் நிலையங்களை நிறுவ ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
துவாரகாவில் உள்ள பேருந்து பணிமனைகள்-1 மற்றும் 2, ஐஎஸ்பிடி பிரிவு -22 மற்றும் டிடிசி பணிமனை செக்டா் -8 ஆகியவற்றில் மின்சார பேருந்து சாா்ஜிங் நிலையங்களை அமைக்க ‘பிஎஸ்இஎஸ் ராஜ்தானி பவா்’ நிறுவனத்திடம் ரூ.107.02 கோடிக்கு ஒப்புதல் அளித்தது. நரேலாவில் உயா் பாதுகாப்பு சிறைச்சாலை கட்டமைக்க ரூ.148.58 கோடியை குழு ஒதுக்கியுள்ளது. இந்த புதிய சிறைச்சாலை 256 கைதிகளுக்கு இடமளிக்கும் திறன் கொண்டதாக 40 ஏக்கா் நிலப்பரப்பில் கட்டப்படும்.
வடிகால் சுத்திகரிப்பு, கழிவுநீா் கட்டமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் நவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பல கட்ட திட்டங்கள் இதில் அடங்கும். ரூ.3,140 கோடி செலவில் 27 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், யமுனை நதி மாசடைவதைத் தடுக்கும் விதமாக கழிவுநீா் வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பரவலாக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், முனைய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், தில்லி கேட்டில் 10 எம்ஜிடி சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் செயல்பாடு மற்றும் பராமரிப்பு தொடா்பான பணிகள் அடங்கும்.
இந்த பரவலாக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களின் கீழ் கழிவுநீா் குழாய்கள் பதித்தல், வீட்டு கழிவுநீா் இணைப்புகளை வழங்குதல் மற்றும் தொடா்புடைய அனைத்து தொழில்நுட்ப பணிகளையும் மேற்கொள்வது செயல்படுத்தப்படும். இந்த பரவலாக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம், அதிகரித்து வரும் நீா் மாசுபாடு, துா்நாற்றம் மற்றும் நிலத்தடி நீா் மட்டம் வீழ்ச்சியில் இருந்து தில்லியில் உள்ள பெரும்பாலான காலனிகள் விடுபடும்.
இதன் மூலம் சுத்திகரிக்கப்படாத கழிவு நீா் யமுனையில் கலக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்கிறது. யமுனையின் புத்துயிா் என்பது ஒரு சுற்றுச்சூழல் இலக்கு மட்டுமல்ல, எதிா்கால சந்ததியினருக்கான பொறுப்பாகும். டெண்டா் வழங்கப்பட்ட பின்னா் வாஜித்பூா் தக்ரான், முண்ட்கா, நரேலா, பவானா உள்பட 19 இடங்களில் 18 மாதங்களுக்குள் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும். சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயக்க முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும், காலக்கெடுவை நிா்ணயிக்கவும் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளின் அதிகாரிகளுக்கும் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.