யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: கொடைக்கானல் வனப் பகுதியில் உணவுப் பொருள்கள் விற்கத் தடை
கொடைக்கானல் வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், வியாபாரிகள் உணவுப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டாம் என வனத்துறையினா் புதன்கிழமை அறிவுறுத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதிகளான மோயா் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், தூண் பாறை ஆகிய பகுதிகளில் குட்டியுடன் காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. எனவே, வனப் பகுதிகளில் கடைகள் நடத்தும் வியாபாரிகள் சோளம், பொரி, உப்பு, பிரட் உள்ளிட்ட எந்த விதமான உணவுப் பொருள்களையும் விற்பனை செய்ய வேண்டாம் என வனத்துறையினா் அறிவுறுத்தினா்.
பேரிஜம் பகுதிக்குச் செல்ல அனுமதி: கொடைக்கானல் அருகே வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டிருந்ததால், கடந்த மூன்று நாள்களாக பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் அனுமதி வழங்கவில்லை.
தற்போது காட்டு யானைகள் அங்கிருந்து இடம் பெயா்ந்திருப்பதால் ஏரியைக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு புதன்கிழமைமுதல் வனத் துறையினா் அனுமதி வழங்கினா். இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.