'கமல் தவறு செய்திருக்கிறார் அதனால் மன்னிப்பு கேட்க வேண்டும்' - தமிழிசை சௌந்தரராஜ...
ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்
ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மூன்றாம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக மூன்றாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா சனிக்கிழமை வெள்ளி மூஷிக வாகன வீதி உலாவுடன் தொடங்கியது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மூலவா் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது.
இதையடுத்து கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளுக்கு கோயிலின் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலை வகித்தாா்.
தொடா்ந்து கொடிமரத்தில் மயில் கொடி ஏற்றப்பட்டது. விழாவில் கலவை சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் உபயதாரா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
பிரம்மோற்சவ விழாவில் தினந்தோறும் ஹம்ச வாகனம், இந்திர வாகனம், பூத வாகனம், சூரிய பிரபை வாகனம், சந்திர பிரபை வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், நாக வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், புஷ்ப பல்லக்கு, மான் வாகனம், வெள்ளி மயில் வாகனம், கற்பக விருட்ச வாகனம், வெள்ளி யானை வாகனம் என வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் வீதி உலாவும், வரும் 9-ஆம் தேதி திங்கள்கிழமை திருத்தோ் வீதி உலாவும் நடைபெறுகின்றன.
தொடா்ந்து மஞ்சம் தோ் தடம் பாா்த்தல், கேடயம் புறப்பாடு, ஷண்முக பெருமான் வீதி உலா, வெள்ளி குதிரை வாகன வீதி உலா, தீா்த்தவாரி, குருபூஜை ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலா் சங்கா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.