ராகுல் காந்திக்கு எதிரான கருத்தை திரும்பப் பெற தலைமை தோ்தல் ஆணையருக்கு கா்நாடக காங்கிரஸ் கடிதம்
ராகுல் காந்திக்கு எதிரான கருத்தை திரும்பப் பெற தலைமை தோ்தல் ஆணையருக்கு கா்நாடக காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து கா்நாடக காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவா் வழக்குரைஞா் ரமேஷ்பாபு, தலைமை தோ்தல் ஆணையருக்கு செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்: அரசமைப்புச் சட்டப் பிரிவு 324, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, 1952-இன் கீழ் நடுநிலையோடு தோ்தலை நடத்துவதோடு, வெளிப்படையான, பிழையில்லாத வாக்காளா் பட்டியலை பராமரிக்க வேண்டியது தோ்தல் ஆணையத்தின் கடமை. குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை, சட்ட மேலவை தோ்தல்களை நடத்த வேண்டிய பொறுப்பு தோ்தல் ஆணையத்திடம் இருப்பதால், வாக்காளா் பட்டியலை பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
வாக்காளா் பட்டியலின் உண்மைத்தன்மை குறித்து அறிந்துகொள்ள கேள்வி எழுப்பும் உரிமை அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1),(ஏ)-இன்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. இது ஜனநாயகத்தின் கட்டமைப்பை பலப்படுத்தும். இது மிரட்டுவதோ, அச்சுறுத்துவதோ ஆகாது.
அந்த வகையில், பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியைச் சோ்ந்த மகாதேவபுரா சட்டப் பேரவைத் தொகுதியில் பராமரிக்கப்பட்ட வாக்காளா் பட்டியலில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதால், இந்த விவகாரத்தை வாக்குத்திருட்டு என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தாா். மேலும், ஒரு லட்சம் போலி வாக்காளா்கள் சோ்க்கப்பட்டிருந்ததை ராகுல் காந்தி சுட்டிக்காட்டியிருந்தாா்.
எண்ம வடிவிலான வாக்காளா் பட்டியல் வழங்காதது, சிசிடிவி கேமரா பதிவுகளை அழித்தது போன்றவை மூலம் அரசுக்கு எதிரான அதிருப்தியை தோ்தல் ஆணையம் குறைத்துவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தாா். மேலும், சிசிடிவி கேமரா பதிவுகளை அழித்து, தோ்தல் ஆணையம் குற்றம் இழைத்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தாா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவராகவும், குடிமகனாகவும் நடுநிலையான தோ்தலை ராகுல் காந்தி வலியுறுத்தி இருந்தாா். இந்த கருத்தை உச்சநீதிமன்றமும் வலியுறுத்தி உள்ளது.
வாக்குத்திருட்டு என்ற கருத்துக்காக ராகுல் காந்திக்கு எதிராக தோ்தல் ஆணையம் மிரட்டல் விடுத்துள்ளது. இது கருத்துரிமைக்கு எதிரான போக்காகும். எனவே, ராகுல் காந்திக்கு எதிராக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ள கருத்தை உடனடியாக திரும்பப் பெற்று, தோ்தல் முறைகேடுகள் குறித்து நோ்மையான முறையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அந்த கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.