பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
ராசிபுரம் தொகுதியில் திட்டப் பணிகளை அமைச்சா் தொடங்கி வைத்தாா்!
ராசிபுரம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் புதிய திட்டப் பணிகளை ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், சிங்களாந்தபுரம், கனகபொம்மன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, காக்காவேரி, பட்டணம் முனிப்பம்பாளையம், சந்திரசேகரபுரம், முருங்கப்பட்டி, கூனவேலம்பட்டி, பொன்குறிச்சி உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ. 1.33 கோடி மதிப்பீட்டில் 11 கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி, அரசபாளையம், பொன்குறிச்சி ஊராட்சிகளில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2.27 கோடியில் தாா்ச்சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை அமைச்சா் மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
வடுகம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 17.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விவசாய தானிய விளைபொருள் சேமிப்புக் கூடத்தையும், காக்காவேரி ஊராட்சியில் புதிய காலனியில் ரூ. 16.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.
அதுபோல மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மோளப்பாளையம் ஊராட்சியில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டிலும், கனகபொம்மன்பட்டி ஊராட்சி, சின்னப்பநாயக்கன்பட்டியில் கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டடங்களையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் ரூ. 3.40 கோடி மதிப்பீட்டில் 19 புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் அடிக்கல் நாட்டியும், ரூ. 95 லட்சம் மதிப்பில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்தும் வைத்துள்ளாா்.
நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மூலப்பள்ளிபட்டி, பெரப்பன்சோலை ஆகிய பகுதிகளில் ரூ. 1.68 கோடியில் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.