கல்குவாரி பிரச்னை: ஃபார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை!
ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான்
ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்னதாகவே இந்தியாவில் புஷ்பக விமானம் இருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐஐஎஸ்இஆர்) நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளகான், பண்டைய மகாபாரத காலத்தில் தொழில்நுட்ப ரீதியில் இந்தியா மிகவும் முன்னேறிய நாடாக இருந்ததாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிவராஜ் செளகான் பேசியதாவது:
”இன்று நம்மிடம் இருக்கும் ட்ரோன்களும் ஏவுகணைகளும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் இருந்தன. இதையெல்லாம் மகாபாரதத்தில் படித்திருக்கிறோம். நமது நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சியடைந்து விட்டது.
மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் வெளிநாடுகளில் வாய்ப்புகளைத் தேடுவதை விட நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். சிலிக்கான் பள்ளத்தாக்கு போன்ற உலகளாவிய தொழில்நுட்ப மையங்களில் உள்ள சிறந்த திறமையாளர்களில் கணிசமானவர்கள் இந்தியர்கள்தான். பட்டதாரிகள் தங்கள் திறமைகளை நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்த வேண்டும்.
நாட்டின் நலனுக்கு எதிராகவுள்ள எந்த ஒப்பந்தத்தையும் ஏற்காது. விவசாயிகள், மீனவர்களின் நலனில் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம்” எனத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் சிவராஜ் செளகான், புஷ்பக விமானத்தை பற்றி குறிப்பிடுவது முதல்முறை அல்ல, ஏற்கெனவே மத்திய பிரதேச முதல்வராக இருக்கும்போது குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், ஹிமாசல் பிரதேசத்தில் கடந்த வாரம் பள்ளி மாணவர்களுடன் உரையாற்றிய முன்னாள் அமைச்சரும் பாஜக எம்பியுமான அனுராக் தாக்குர், விண்வெளிக்கு சென்ற முதல் விண்வெளி வீரர் அனுமன் என்று தெரிவித்திருந்தார்.