லாரி வாடகை ஏப்ரல் மாதம் சீராக இருந்தது: ஸ்ரீராம் மொபிலிட்டி
சென்னை: நாடு முழுவதும் சுங்கக் கட்டணங்கள் அதிகரித்த போதிலும், பெரும்பாலான வழித்தடங்களில் லாரி வாடகை ஏப்ரல் 2025ல் குறைவாகவே இருந்ததாக ஸ்ரீராம் மொபிலிட்டி இன்று தெரிவித்துள்ளது.
லாரி வாடகைகள் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியை பதிவு செய்து வந்த நிலையில், கொல்கத்தா - குவஹாட்டி - கொல்கத்தா வழித்தடத்தில் 14 சதவிகிதமும், மும்பை - சென்னை - மும்பை வழித்தடத்தில் 8 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.
பெரும்பாலான லாரி வாடகைகள் மாறாமல் இருந்தபோதிலும், தில்லி - சென்னை - தில்லி வழித்தடம் 2.5 சதவிகிதமும், தில்லி - பெங்களூரு - தில்லி வழித்தடம் 1.6 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணங்கள் 5 முதல் 10 சதவிகிதம் அதிகரித்த போதிலும், லாரி வாடகை ஏப்ரல் மாதத்தில் குறைவாகவே இருந்ததாக ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான ஒய்.எஸ்.சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், வலுவான கிராமப்புற தேவை மற்றும் மேம்பட்ட சாலை இணைப்பால் ஏப்ரல் மாதத்தில் இரு சக்கர வாகன விற்பனை மாதந்தோறும் 12 சதவிகிதமும், பேருந்துகளின் விற்பனை 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனை 5 சதவிகிதம் அதிகரித்துள்ள வேளையில், இரு சக்கர மின்சார வாகனங்களின் விற்பனை 30 சதவிகிதமும் மின்சார கார்களின் விற்பனை 4 சதவிகிதம் சரிந்துள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், மின்சார கார்கள் 58 சதவிகிதமும், மூன்று சக்கர வாகனங்கள் 49 சதவிகிதமும் மற்றும் இரு சக்கர வாகனங்கள் 40 சதவிகிதம் வளர்ந்துள்ளது.
தொழில்துறை, சுரங்கம் மற்றும் வணிக நடவடிக்கைகள் காரணமாக ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல் நுகர்வு 2 சதவிகிதம் குறைந்துள்ள நிலையில் டீசல் நுகர்வு 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: மாருதி விற்பனை 7% உயா்வு