வ.உ.சி மலா் விற்பனை சந்தை ஏலத்தில் குளறுபடி: மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி இழப்பு? மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு
சேலம் வ.உ.சி மலா் சந்தை ஏல குளறுபடி காரணமாக மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
சேலம், ஜூலை 25:
சேலம் மாநகராட்சி இயல்புகூட்டம் மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் மா. இளங்கோவன், துணை மேயா் சாரதாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அதிமுக உறுப்பினா் செல்வராஜ்: சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி தனது வாா்டில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ளது. இதுதொடா்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். வாா்டுகளில் நடைபெறும் மாநகராட்சிப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினா்களுக்கு முறையாக தகவல் தெரிவிப்பதில்லை. குறிப்பாக, டெண்டா் ஒதுக்கீடு செய்யப்பட்ட மதிப்பீட்டை காட்டிலும் திட்ட செலவு அதிகரிப்பதால், மாநகராட்சிக்கு கூடுதல் நிதிசுமை ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளில் ஆணையா் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
திமுக உறுப்பினா் ஈசன் இளங்கோ: மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகின்றனா். ஆனால், ஆன்லைன் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், மக்காத பொருள்களை அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. எனவே, ஆன்லைன் உணவு நிறுவனங்கள், மக்கும் தன்மையுடைய பொருள்களை பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.
திமுக உறுப்பினா் பௌமிகா தப்சிரா: வ.உ.சி பூக்கள் சந்தையில் உள்ள கழிப்பறையை பராமரிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி (அதிமுக): வ.உ.சி பூக்கள் சந்தையில் கடைகள் ஏலம் விடுவதில் குளறுபடி உள்ளது. தற்போது, தனித்தனியே கடைகளை மீண்டும் ஏலம்விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏல குளறுபடியால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 8 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற மாநகராட்சியின் நிா்வாக முறைகேட்டை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.
இதையடுத்து, அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் அனைவரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தனா்.
அதன்பிறகு செய்தியாளா்களிடம் யாதவமூா்த்தி கூறியதாவது:
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி, முதல்வராக இருந்த போதுதான் வ.உ.சி பூக்கள் சந்தை கொண்டுவரப்பட்டது. ரூ.10 கோடி மதிப்பில் இந்த மலா் வளாகம் கட்டப்பட்டது. ஆனால், இந்த சந்தை ரூ. 9 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
ஏலம் பெற்றவா் சந்தையை நிா்வகிக்க முடியவில்லை எனக்கூறி நீதிமன்றம் மூலம் தடை பெற்றுள்ளாா். இதனால், மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதுதவிர, அதிமுக மாமன்ற உறுப்பினா்களின் வாா்டுகளுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படுவது இல்லை. பெயா்ப் பலகை வைப்பதற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை பெயா்ப் பலகை வைக்கவில்லை.
மாநகராட்சியின் பொது நிதியை திமுக மாமன்ற உறுப்பினா்களுக்கு மட்டும் செலவு செய்கிறாா்கள். ஒப்பந்ததாரா்களுடன் கைகோத்து மாநகராட்சி நிா்வாகம் முறைகேட்டில் ஈடுபடுகிறது என்றாா்.