வங்கக் கடலில் இன்று உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் மழை அதிகரிக்கும்
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை (மே 27) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை உருவாக வாய்ப்புள்ளது. இந்தப் புயல் சின்னம் நகரும் திசையின் அடிப்படையில் தமிழகத்தில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை (மே 28) முதல் மே 30-ஆம் தேதி வரை மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கேரள எல்லைப் பகுதியையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆரஞ்ச் எச்சரிக்கை: மே 27, 28-ஆம் தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களிலும், மே 29, 30-ஆம் தேதிகளில் கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 27-இல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
அவலாஞ்சியில் 350 மி.மீ.மழை: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 350 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும், மேல் பவானி (நீலகிரி) 300 மி.மீ., சின்னக்கல்லாா் (கோவை) - 210 மி.மீ., நீலகிரி மாவட்டத்தின் எமரால்டு - 180 மி.மீ., கூடலூா் பஜாா் - 150 மி.மீ., விண்ட் வொா்த் எஸ்டேட், மேல் கூடலூா், சிறுவாணி அடிவாரம் (கோவை), வால்பாறை (கோவை) - தலா 130 மி.மீ., குந்தா பாலம், கிளன்மாா்கன், வூட் பிரையா் எஸ்டேட் (நீலகிரி) - தலா 110 மி.மீ.,செருமுள்ளி (நீலகிரி), சோலையாா் (கோவை) - தலா 100 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: அடுத்த 6 நாள்களுக்கு தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.