TNPL: அண்ணன் - தம்பி அதிரடி அரைசதம்... போராடி தோற்ற அஸ்வினின் திண்டுக்கல் அணி!
வனக்குழுவை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
திருப்பத்தூா்: வனக்குழுவை புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து மொத்தம் 473 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மாவட்ட செயலாளா் முல்லை தலைமையில் அளித்த மனு: திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தா்மபுரி உள்ளிட்ட பகுதியில் மாங்காய் விளைச்சல் கூடுதலாக உள்ளது. மா வியாபாரிகளும், கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை உரிமையாளா்களும் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலையை அளிக்காமல் நஷ்டமடைய செய்கின்றனா். பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும்.
கந்திலி அடுத்த ஏர்ரம்பட்டி,மோட்டூா் ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா். செட்டேரியன் வட்டத்தில் தனியாா் நிறுவனத்தினா் கைப்பேசி கோபுரம் அமைக்க முயற்சி செய்து வருகின்றனா். இந்த பகுதியில் அமைத்தால் இங்கு உள்ள பொதுமக்கள் நலன்,விவசாயம் பாதிக்கும்.
புதூா்நாடு அருகே வழுதலம்பட்டு கிராம மக்கள் அளித்த மனு: ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் உள்ள தெருக்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்றுவர மிகவும் சிரமப்படுகிறோம். எனவே அந்த பகுதியை அளத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ராஜா பெருமாள் தலைமையில் அளித்த மனு:- திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள வனத்துறையின் சாா்பில் வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் வனக்குழு ஏற்படுத்தப்பட்டு இயங்கி வந்தது. ஆனால் தற்போது வனக்குழு செயல்பாட்டில் இல்லை. எனவே வனக்குழுவை மீண்டும் புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.