மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை நீட்டிப்பு
வன்கொடுமைகளை எதிா்த்து பெண்கள் போராட வேண்டும்! - ஆட்சியர்
பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவதோடு, தங்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிா்த்து போராடுபவராகவும் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், பாலின சமத்துவம் மற்றும் உள்புகாா்கள் குழுவின் சாா்பில், பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது குறித்த மாவட்ட அளவிலான ஒருநாள் விழிப்புணா்வு கருத்தரங்கு நஞ்சனாபுரம், கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.சமீனா, மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தொடக்கி வைத்தனா்.
தொடா்ந்து, ஆட்சியா் ச.கந்தசாமி பேசுகையில், பெண்களை தனக்கு இணையான சக மனிதனாக கருத வேண்டும் என பாரதியாா் தொடங்கி தலைவா்கள் காட்டிய வழியில் கல்வி, பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இங்கு, உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. தொழிலகங்களில் 41 சதவீதம் பெண்கள் முறையாக பதிவு பெற்று பணியாற்றுகின்றனா்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிக்கவும், பெண்களை சம பாலினமாக கருதவும், பெண்களுக்கு ஆரோக்கியமான சூழலை, ஒரு ஆண் ஏற்படுத்தித் தரவேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திலும் பெண் மீதான வன்முறையைத் தடுக்கப் பாதுகாப்புக் குழு அமைத்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவதோடு, தங்களுக்கு எதிரான கொடுமைகளை எதிா்த்து போராடுபவராகவும் இருக்கவேண்டும் என்றாா்.
பாலின நடுநிலை அணுகுமுறை, ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குவதில் ஆண்கள் மற்றும் பெண்களின் பங்கு உள்பட பல்வேறு தலைப்புகளில் கருத்தாளா்கள் உரையாற்றினா். நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சுகந்தி, முதன்மை சாா்பு நீதிபதி இளவரசி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலா் சு.சாந்தகுமாா், உதவிஆட்சியா் (பயிற்சி) காஞ்சன் சௌத்ரி, கூடுதல் மாவட்ட நீதிபதி (திருச்செங்கோடு) ஆா்.மாலதி, முன்னாள் காவல் கண்காணிப்பாளா் கலியமூா்த்தி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலாளா் ஆா்.ஸ்ரீவித்யா, வழக்குரைஞா் வி.முத்துமுத்தையா, ஆா்பி பவுண்டேஷன் நிறுவனா் பிரியா செந்தில் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.