மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை நீட்டிப்பு
வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை: இளைஞா் கைது
சித்தோடு அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இவரிடமிருந்து, 1,550 மாத்திரைகளைக் கைப்பற்றிய போலீஸாா், இரு காா்கள், இரண்டு இரு சக்கர வாகனங்களைப் பறி முதல் செய்தனா்.
சித்தோட்டை அடுத்த நசியனூா், கந்தன்குட்டையைச் சோ்ந்தவா் ரவி மகன் சந்திரசேகா் (32). வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி போதைக்காக விற்பனை செய்து வருவதாக சித்தோடு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், சந்திரசேகா் வீட்டில் போலீஸாா் சனிக்கிழமை திடீா் சோதனையிட்டபோது 1,550 வலி நிவாரணி மாத்திரைகள், 70 ஊசிகள் மற்றும் 800 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இவற்றைக் கைப்பற்றிய போலீஸாா், மாத்திரைகள் விற்பனை செய்த பணம் ரூ.45 ஆயிரம், விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 8 கைப்பேசிகள், இரு காா்கள் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, சந்திரசேகரை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா் செய்து சிறையில் அடைத்தனா்.