புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
வழக்குரைஞா் மீது பொய் வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு!
வழக்குரைஞா் மீது பொய் வழக்குப் பதிவு செய்த காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்த வழக்குரைஞா் கலந்தா் ஆசிக் அகமது தாக்கல் செய்த மனு :
தேவிப்பட்டினத்தைச் சோ்ந்த மைதீன் என்பவரை வழக்கு விசாரணை எனக் கூறி காவல் துறையினா் துன்புறுத்திய நிலையில், ராமநாதபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய புகழேந்தி கணேஷை வழக்கில் எதிா்மனுதாரராகச் சோ்த்து மதுரை அமா்வில் ஆட்கொணா்வு மனுத் தாக்கல் செய்தேன். இதனால், காவல் துறையினா் என் மீது விரோத மனப்பான்மையுடன் இருந்தனா்.
இந்த நிலையில், கடந்த 2020-இல் மருத்துவா் ஒருவரை பணம் கேட்டு மிரட்டி தொல்லை கொடுத்தவா் மீது புகாா் அளித்தோம். அதில், அவா் போலி மருத்துவா் என்றும், அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி என் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்து, தொண்டி காவல் துறையினா் என்னை சிறையில் அடைத்தனா். இது தொடா்பான வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கடந்த 2023-இல் என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
வழக்குரைஞராக மரியாதையுடன் பணியாற்றி வந்த எனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் காவல் துறையினா் பொய்யான வழக்குப் பதிவு செய்து 6 நாள்கள் சிறையில் அடைத்தனா். எனவே, இதற்குக் காரணமான காவல் துணைக் கண்காணிப்பாளா் புகழேந்தி கணேஷ், காவல் ஆய்வாளா்கள் ராஜேஸ்வரி, கலாராணி, உதவி ஆய்வாளா்கள் ஜோதிமுருகன், சரவணன் ஆகியோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதற்கு இழப்பீடாக ரூ. 20 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி தனபால்,
இதுதொடா்பாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.