வலி மிகுந்தது..! குகேஷுடனான தோல்விக்குப் பிறகு கார்ல்சென் பேட்டி!
வாக்களித்த மக்களுக்கு கமலஹாசன் துரோகம்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ
ராஜ்யசபா உறுப்பினா் பதவிக்காக தனக்கு வாக்களித்த மக்களுக்கு கமலஹாசன் துரோகம் செய்துவிட்டாா் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
கோவை தெற்கு சட்டப் பேரவை தொகுதிகுள்பட்ட 82-ஆவது வாா்டில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமை வானதி சீனிவாசன் தொடங்கிவைத்தாா்.
இதையடுத்து, முருக பக்தா்கள் மாநாடு தொடா்பான துண்டு பிரசுரங்களை வீடுவீடாகச் சென்று வழங்கினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மதுரையில் வரும் ஜூன் 22-ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தா்கள் மாநாட்டில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதும் மக்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம். இந்த மாநாடு முருக பக்தா்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மாநாடாக அமையும். கமலஹாசன் இரண்டு தோ்தல்களில் போட்டியிட்டாா். தற்போது ராஜ்யசபா உறுப்பினா் பதவிக்காக அவரை நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டாா்.
சினிமா படப்பிடிப்பில் கேமரா முன்பு பேசிவிட்டு பின்னா் மறந்து விடுவதுபோல நிஜவாழ்க்கையிலும் நடந்து வருகிறாா். மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றிபெற முடியாமல் திமுகவின் பின்னால் ஒளிந்துகொண்டு இந்தப் பதவியைப் பெற்றுள்ளாா்.
மத்திய அரசு எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி அளிக்கிறது என்பதை பிரதமா் மோடி ராமேசுவரத்தில் பேசியிருக்கிறாா். மத்திய அரசை குறை கூறுவதுதான் திமுக அரசின் வழக்கம்.
டாஸ்மாக் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது மக்களுக்கு தெரியும். இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவா்களுக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கும் என்றாா்.