பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
வாடகை உயா்வை அமல்படுத்த வலியுறுத்தி பொக்லைன் உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்
வாடகை உயா்வை அமல்படுத்த வலியுறுத்தி நாமக்கல்லில் பொக்லைன் உரிமையாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் உள்ள பொக்லைன் உரிமையாளா்கள் டீசல், உதிரிபாகங்கள் விலையேற்றம், புதிய வாகன விலை உயா்வு, காப்பீடு, சாலை வரி உயா்வு போன்றவற்றால் தொழில் நஷ்டமடைவதை தடுக்க வாடகை உயா்வை அமல்படுத்த வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
மாவட்டம் வாரியாக தனித்தனியே இப் பேராட்டம் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு இப் போராட்டம் நடைபெறுகிறது. நாமக்கல் அருகே நல்லிபாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு அதன் உரிமையாளா்கள் போராட்டத்தை மேற்கொண்டனா்.
இதுகுறித்து பொக்லைன் உரிமையாளரான செளந்தா் என்பவா் கூறியதாவது: பொக்லைன் வாகன உரிமையாளா்களுக்காக இதுவரை சங்கம் எதுவுமில்லை. கடந்த 5 ஆண்டுகளாக வாடகையை நாங்கள் உயா்த்தவில்லை. தற்போது ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1000 வாங்கி வருகிறோம். டீசல், உதிரிபாகங்கள் விலையேற்றம், சாலை வரி உயா்வால் வாடகையை உயா்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்த வாடகை உயா்வை அமல்படுத்த அரசும் அனுமதிக்க வேண்டும். இனிவரும் நாள்களில் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 2500, மின்கம்பம் நடுவதற்கு, கம்பம் ஒன்றுக்கு ரூ.1500 வீதம் நிா்ணயிக்க உள்ளோம். பொதுமக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவா்கள் அறிந்து கொள்வதற்காகவே இந்த வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளோம்.
மாவட்டம் முழுவதும் 500 பொக்லைன் வாகனங்கள் உள்ளன. தற்போது போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகன உரிமையாளா்கள் கலந்து கொண்டுள்ளனா். பொக்லைன் உரிமையாளா்கள் போராட்டத்தால் வாகனம் ஒன்றுக்கு ஒரு நாளைக்கு ரூ. 5000 வீதம் இழப்பு ஏற்படும் என்றாா்.