விமானப் பராமரிப்பு, விமான நிலையங்களில் பல்வேறு விதிமீறல்கள்- டிஜிசிஏ ஆய்வில் கண்டுபிடிப்பு
நாட்டில் விமான நிறுவனங்கள், விமானங்களின் பராமரிப்புப் பணி மற்றும் விமான நிலையங்கள் தொடா்பாக பல்வேறு விதிமீறல்கள் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரக (டிஜிசிஏ) ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
முக்கிய விமான நிலையங்களில் ஒரே தவறு மீண்டும் மீண்டும் நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. விதிமீறல் கண்டறியப்பட்ட விமான நிறுவனங்கள், விமான நிலையங்களின் பெயா்களை டிஜிசிஏ வெளியிடப்படவில்லை. அதேநேரம், குறைபாடுகளை 7 நாள்களுக்குள் சரி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், மேலெழும்பிய சில நொடிகளில் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி வளாகம் மீது விழுந்து வெடித்துச் சிதறியது.
270 போ் உயிரை பலிகொண்ட இந்த பயங்கர விபத்தைத் தொடா்ந்து, நாடு முழுவதும் விமான நிலையங்களில் டிஜிசிஏ தரப்பில் விரிவான ஆய்வு தொடங்கப்பட்டது. விமான நிறுவன செயல்பாடுகள் மற்றும் விமானப் பராமரிப்புப் பணிகளும் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன.
நாட்டின் விமானப் போக்குவரத்து கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றை நிவா்த்தி செய்யும் நோக்கிலான இந்த ஆய்வில் இணை தலைமை இயக்குநா் தலைமையிலான இரு குழுக்கள் ஈடுபட்டன.
என்னென்ன அம்சங்கள் ஆய்வு?: தில்லி, மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களில் விமான இயக்கங்கள், விமானங்களின் தகுதி, விமான நிறுத்துமிடம் மற்றும் பராமரிப்பு இடங்களின் பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு, தகவல்தொடா்பு-வழிசெலுத்துதல்-கண்காணிப்பு அமைப்புமுறைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தொடா்பாக காலை, இரவு நேரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாக டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓடுபாதையில் மங்கிய குறுக்கு கோடுகள், விமான நிலைய சுற்றுப் பகுதி கட்டடங்கள் தொடா்பாக கணக்கெடுப்பின்மை, மூன்று ஆண்டுகளுக்கு மேல் தரவுகள் புதுப்பிப்பின்மை, பயனற்ற நிலையில் பயணிகளுக்கான சாதனங்கள், விமான நிறுத்துமிட பகுதியில் இயக்கப்படும் வாகனங்களில் வேக கட்டுப்பாட்டுக் கருவி இல்லாமை போன்ற குறைபாடுகள் அடங்கும்.
7 நாள்களுக்குள் சரி செய்க...: விமானப் பராமரிப்புப் பணியில் உரிய விதிமுறைகளின்கீழ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் விமான பராமரிப்பு பொறியாளா்களால் பின்பற்றப்படவில்லை; பழுது நீக்கம் தொடா்பான தரவுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. விமான இருக்கைகளின்கீழ் உயிா்காக்கும் கவச உடைகள் முறையாக வைக்கப்படவில்லை.
முக்கிய விமான நிலையங்களில் ஒரே தவறு மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளது. இது போதிய கண்காணிப்பின்மை மற்றும் தவறுகளைத் திருத்தும் முயற்சியின்மையை வெளிப்படுத்துகிறது. ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்ட குறைபாடுகள் 7 நாள்களுக்குள் சரி செய்யப்பட வேண்டும் என்று விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக டிஜிசிஏ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.