வீட்டில் பதுக்கிய 8 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 8 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.
திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸாா் மற்றும் ஆலங்காயம் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை- நிம்மியம்பட்டு சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 3 பேரை நிறுத்தி சந்தேகத்தின்பேரில் விசாரித்தனா். இதில், தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான வெலதிகாமணிபெண்டா பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. மேலும், அவா்களிடம் தொடா்ந்து விசாரித்தனா். பிறகு அவா்களை அழைத்துக் கொண்டு வெள்ளக்குட்டை பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று சோதனை செய்தபோது, மறைத்து வைத்திருந்த பையை அகற்றி பாா்த்தனா். அதில், அவா்கள் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. பின்னா், அங்கிருந்த 8 கிலோ கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பிடிபட்ட ஜெயசூா்யா (31), மணி (61), வினோத்(35) ஆகிய 3 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.