வீர தீர சூரன் வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை!
வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தில்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதனால், தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணிக்கு திரையிட இருந்த முதல் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு வெளியாக இருந்தது. சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முழுநீள ஆக்ஷன் திரைப்படமான இது ஒரே நாள் இரவில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தைதான் முதலில் வெளியிடுகிறார்கள்.
வீர தீர சூரனுக்குத் தடை!
படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு பி4யு என்ற நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்காக ஓடிடி உரிமத்தை பி4யு நிறுவனத்துக்கு தயாரிப்பாளர் எழுதிக் கொடுத்துள்ளார்.
ஆனால், ஓடிடி உரிமம் விற்கப்படாமலேயே படத்தை வெளியிடுவதாக தில்லி உயர்நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 27 காலை 10.30 மணிவரை வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கை இன்று காலை விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளனர். விசாரணையில் இருதரப்புக்கும் உடன்பாடு எட்டப்பட்டால், படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி வழங்கும்.
இதனால், வெளிநாடுகளில் இன்று வெளியாகவிருந்த வீர தீர சூரன் திரைப்படத்தின் காட்சிகளும், தமிழகத்தில் காலை 9 மணி காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றம் அனுமதி வழங்கும் பட்சத்தில் பகல் 12 மணிக்கு திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.