வெம்பக்கோட்டை அகழாய்வில் கல் மணி, பச்சை நிற கண்ணாடி மணி!
வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வில் அரிய வகை அகெட் எனும் கல் மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக்காய், சங்கு வளையல் ஆகியவை கண்டறியப்பட்டன.
விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
3-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், சுடுமண் உருவப் பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3,500-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது, அரிய வகை அகெட் எனும் கல் மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக்காய், சங்கு வளையல் ஆகியவை கண்டறியப்பட்டன.
இதன்மூலம், பண்டையத் தமிழா்கள் விலை மதிப்பற்ற அகெட் போன்ற அணிகலன்களைப் பயன்படுத்தியது தெரியவந்ததாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.