வெறிநாய் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயம்!
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் வெறிநாய் ஒன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள், நின்று கொண்டிருந்தவர்களை கடித்துவிட்டு சென்றதால் 20க்கும் மேற்பட்டோர் காயமைடந்தனர்.
காயமடைந்தவர்கள் சங்ககிரி தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட ஓ.ராமசாமி நகர், பவானி பிரதான சாலை, மத்தாளிகாலனி, பழைய எடப்பாடி சாலை, நகராட்சி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையில் நடந்து சென்றவர்கள், நின்று கொண்டிருந்தவர்கள் என 20க்கும் மேற்பட்ட நபர்களை வெறி நாய் ஒன்று கடித்துவிட்டு சென்றுள்ளது.
இதில் காயமடைந்த நகராட்சி துப்பரவு மேற்பார்வையாளர் அழகேசன் (55), விஜயகுமார் (47), குமார் (57), ஸ்ரீனிவாசன் (55) உள்ளிட்ட பலர் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தலைமை மருத்துவ அலுவலர் சரவணகுமார் தலைமையிலான மருத்துவர்கள் காயமைடந்தவர்களுக்கு தடுப்பூசியும், குலுக்கோஸும் செலுத்தி வருகின்றனர். தலைமை மருத்துவர் காயமடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி அறை ஓதுக்கீடு செய்து கண்காணித்து வருகிறார். அரசு மருத்துவமனையில் 496 நாய்க்கடிமருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தகவலறிந்து வந்த நகராட்சி ஆணையாளர் எஸ்.சிவரஞ்சனி, நகராட்சி துணைத்தலைவர் ஆர்.வி.அருண்பிரபு, திமுக நகர செயலாளர் கே.எம்.முருகன் ஆகியோர் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஒரு வெறி நாய் கடித்து ஒரு சமயத்தில் பலர் காயமடைந்ததால் சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெரு நாய்களைக் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!