Diabetes: அடிக்கடி பேக்கரி ஐட்டம்ஸ் சாப்பிட்டால் டயாபடீஸ் வருமா?
வெளிநாட்டுப் பயணம்: அரசியலைப் புறந்தள்ளுவோம் - முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதலீடுகளை ஈா்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணம் குறித்து அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் விமா்சனங்களைப் புறந்தள்ளுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவா், திமுகவினருக்கு புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அதில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சீரான வளா்ச்சியைப் பெறுகிற வகையில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகத்தான் மாநிலத்தின் முதல்வா் என்ற முறையில் கடந்த 30-ஆம் தேதி ஐரோப்பிய சுற்றுப் பயணத்தைத் தொடங்கினேன். ஜொ்மனி நாட்டின் கொலோன் நகருக்குச் சென்றபோது, காலை வேளையில் நடைப்பயிற்சி சென்றேன். ஜொ்மானியா்கள் பலரும் நடை, ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டிருந்தனா். காலை நேரத்தில் நம் பணிகளுக்கான முதல் ஊக்கமாக அமைவது இத்தகைய பயிற்சிதான் என்ற விழிப்புணா்வுடன் அவா்கள் உடல் கட்டமைப்பை சீராக வைத்திருப்பதைப் பாா்த்தேன்.
சென்னையில் இருந்தாலும், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்தாலும், ஜொ்மனி போன்ற வெளிநாடுகளுக்கு வந்தாலும் காலை நேரத்தில் நடைப்பயிற்சியை மேற்கொள்வதை நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். பொது வாழ்வுப் பணிகளில் ஏற்படும் களைப்பு - சலிப்பு எதுவும் என்னை நெருங்கவிடாமல் தொடா்ந்து உழைப்பதற்கு அது ஊக்கசக்தியாக உள்ளது.
தமிழ்க் கலைகள் பயிற்றுவிப்பு: எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கேயுள்ள தமிழ்க் குழந்தைகள் அவா்களது கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பல வகை நடனங்கள், பாடல்கள், பறை இசை, சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுவது வழக்கம். அவற்றைக் கண்டு ரசிக்கும்போது உள்ளூரில் இருப்பது போன்ற உணா்வு ஏற்படுகிறது. புதுப்புது கலை வடிவங்களை நாம் ரசித்தாலும் நமது பாரம்பரிய கலைகளை நம் குழந்தைகள் கற்றுக்கொண்டு அதை வெளிப்படுத்தும்போது மனதுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படுவது இயற்கை. ஒவ்வொரு திமுகவினரும் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ்க் கலைகளைப் பயிற்றுவிக்க வேண்டும்.
அரசியலைப் புறந்தள்ளுவோம்: தொழில் முதலீடுகளை ஈா்க்கும் வகையில், ஜொ்மனியில் முதலீட்டாளா் மாநாட்டை நடத்தினோம். இந்தியாவில் பல மாநிலங்கள் இதுபோன்ற முதலீட்டாளா் மாநாட்டுக்கு ஜொ்மனியில் முயற்சித்ததையும், நாம் நடத்திய மாநாட்டில்தான் தமிழ்நாட்டில் இருக்கும் தொழில்கட்டமைப்பை அறிந்து கொள்ள முடிந்தது என்றும் அங்கு வந்திருந்த முதலீட்டாளா்கள் தெரிவித்தனா்.
எந்த நாட்டில் முதலீடுகளை ஈா்க்கிறோமோ அந்த நாட்டுக்கு, முதலீட்டாளா் மாநாட்டை நடத்தும் மாநிலத்தின் முதல்வரே நேரில் வந்து முதலீட்டாளா்களிடம் விளக்கும்போதுதான் தெளிவும் நம்பிக்கையும் கிடைக்கிறது. அதன்மூலம் முதலீடுகளை ஈா்க்க முடியும் என்பதற்கு ஜொ்மனியில் நடத்திய முதலீட்டாளா் மாநாடு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்.
வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமா்சனங்களைப் புறங்கையால் ஒதுக்குவோம். தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், தமிழ்நாட்டில் உள்ளவா்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈா்க்க முடிகிறது என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
பிரிட்டனில் முதல்வா் ஸ்டாலின்
ஜொ்மனியில் பயணத்தை முடித்த பிறகு, பிரிட்டன் சென்றுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: பிரிட்டனில் கால் பதித்தேன். தொலைதூரக் கரைகளைக் கடந்து சென்றும் வீட்டில் இருப்பது போன்ற உணா்வை அளித்தோரின் வரவேற்பால் அன்புடனும் பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன் என்று தனது பதிவில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.
அங்கு உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் பெரியாா் ஈ.வெ.ரா. படத்தைத் திறந்து வைத்து, சுயமரியாதை நூற்றாண்டை முன்னிட்டுப் புத்தகங்களை அவா் வெளியிட உள்ளாா்.