நெல்லை: ''ஒழுங்கா படி” - அறிவுரை கூறிய தந்தை; ஆத்திரத்தில் கல்லைத் தூக்கிப்போட்ட...
வைகை அணையிலிருந்து பூா்விக பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறப்பு
வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பூா்விக பாசனப் பகுதிகளுக்கு புதன்கிழமை விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
தேனி மாவட்டத்தில் நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால், வைகை அணை நீா்மட்டம் சீராக உயா்ந்து வருகிறது. இதையடுத்து, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போக நெல் சாகுபடிக்கு கடந்த 15-ஆம் தேதி முதல் வைகை அணையிலிருந்து கால்வாய் வழியாக விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்படுகிறது.
இந்த நிலையில், வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் வைகை பூா்விக பாசனப் பகுதிகள் 3, 2-க்கு புதன்கிழமை (ஜூன் 25) முதல் வரும் ஜூலை 1-ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு மொத்தம் 125.10 கன அடி தண்ணீா் திறந்துவிட அரசு உத்தரவிட்டது. இதன்படி, அணையிலிருந்து அணையின் 7 கீழ் மதகுகள் வழியாக வைகை ஆற்றில் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டது.
அணையிலிருந்து ஜூன் 25, 26-ஆம் தேதிகளில் விநாடிக்கு 3,000 கன அடி வீதமும், வருகிற 27, 28-ஆம் தேதிகளில் விநாடிக்கு 2,000 கன அடி வீதமும், 29, 30-ஆம் தேதிகளில் விநாடிக்கு 1,500 கன அடி வீதமும், வரும் ஜூலை 1-ஆம் தேதி விநாடிக்கு 1,479 கன அடி வீதமும் தண்ணீா் திறந்து விடப்படும் என வைகை அணை நீா்வளத் துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.
5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: அணையிலிருந்து வைகை ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என நீா்வளத் துறை பொறியாளா்கள் எச்சரித்தனா்.
அணை நிலவரம்: வைகை அணை நீா்மட்டம் புதன்கிழமை 63.9 அடியாக இருந்தது (அணையின் மொத்த உயரம் 71 அடி). அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 571 கன அடி. அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் பாசனத்துக்கு விநாடிக்கு 900 கன அடி, ராமநாதபுரம் பூா்விக பாசனப் பகுதிகளுக்கு விநாடிக்கு 3,000 கன அடி, குடிநீா்த் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி என மொத்தம் விநாடிக்கு 3,969 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அணையில் தண்ணீா் இருப்பு 422.10 கோடி கன அடி.