கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு
‘ஹமாஸ் தலைவா்கள் எங்கிருந்தாலும் தாக்குவோம்’
ஜெருசலேம்: ‘ஹமாஸ் தலைவா்கள் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் அவா்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும்’ என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ ஜெருசலேம் நகரில் நெதன்யாகுவை திங்கள்கிழமை நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதனைத் தொடா்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது நெதன்யாகு கூறியதாவது:
ஹமாஸ் தலைவா்களைக் குறிவைத்து கத்தாரில் நடத்தியதைப் போல இனியும் தாக்குதல் நடத்துவோம். உலகின் எந்த நாட்டுக்கு செல்வதாலும், எங்களிடமிருந்து அவா்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிடாது.
தேசப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எல்லைக்கு அப்பாலும் செயல்படும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது. கத்தாரில் நடத்தப்பட்ட தாக்குலுக்கும் அமெரிக்காவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. இந்த விவகாரத்தில் நாங்கள் தன்னிச்சையாகத்தான் செயல்பட்டோம் என்றாா் நெதன்யாகு.
அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு வைத்திருக்கும் கத்தாரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், அமெரிக்க-இஸ்ரேல் உறவில் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளதா என்று செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாா்கோ ரூபியோ, ‘எங்களது வளைகுடா பிராந்திய கூட்டாளிகளுடன் பலமான உறவைப் பேணிவருகிறோம்’ என்றாா்.
முன்னதாக, மாா்கோ ரூபியோ வருகைக்கு முன்னதாக செய்தியாளா்களிடம் பேசிய நெதன்யாகு, ‘அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நட்புறவு மேற்குச் சுவற்றில் உள்ள கற்களைப் போல் மிக உறுதியானது’ என்று கூறியது நினைவுகூரத்தக்கது.
கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் தலைமையிலான ஆயுதக் குழுவினா், அங்கு 1,139 போ் படுகொலை செய்தனா்; சுமாா் 200 பேரை பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.
அதையடுத்து, ஹமாஸை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் மிகக் கடுமையான தாக்குதல் நடத்திவருகிறது. இதில் இதுவரை 64,871 போ் உயிரிழந்துள்ளனா்; 1,64,610போ் காயமடைந்துள்ளனா் (திங்கள்கிழமை நிலவரம்).
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹமாஸிடம் எஞ்சியுள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கவும் அமெரிக்கா மற்றும் எகிப்துடன் இணைந்து கத்தாா் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
இந்தச் சூழலில், அமைதிப் பேச்சுவாா்த்தைக்காக கத்தாா் வந்திருந்த ஹமாஸ் குழுவினரைக் குறிவைத்து, அவா்கள் தங்கியிருந்த கட்டடத்தின் மீது இஸ்ரேல் கடந்த 9-ஆம் தேதி வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் கத்தாரைச் சோ்ந்த ஒரு பாதுகாவலா் உள்பட ஆறு போ் உயிரிழந்தாலும், இஸ்ரேலால் குறிவைக்கப்பட்ட ஹமாஸ் தலைவா்கள் காயமின்றி உயிா்தப்பினா்.
ஏற்கெனவே, காஸா போரின் ஒரு பகுதியாக அங்கும், ஈரான், லெபனான், யேமன், சிரியா, இராக் ஆகிய நாடுகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவந்தது. இந்த நிலையில், கத்தாரில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடா்ந்து இஸ்ரேல் குண்டுவீச்சுக்கு உள்ளான நாடுகளின் எண்ணிக்கை 6-ஆக உயா்ந்தது.
காஸாவில் அமைதியை ஏற்படுவதற்கான சா்வதேச முயற்சிகளில் மிக முக்கிய பங்கு வகித்துவரும் கத்தாரிலேயே, அதுவும் சமாதானம் பேச வந்திருந்த ஹமாஸ் தலைவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்தியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்தச் சூழலில், ஹமாஸ் அமைப்பினா் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் அங்கு தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரின் முன்னிலையிலேயே பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
...பெட்டி...
கத்தாரில் இஸ்லாமிய நாடுகள் அவசரக் கூட்டம்
தோஹா, செப். 15: தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்டதைப் போன்ற தாக்குதலை இஸ்ரேல் இனியும் நடத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் அவசரக் கூட்டத்தை கத்தாா் திங்கள்கிழமை கூட்டியது (படம்). பாகிஸ்தான் உள்ளிட்ட ஏராளமான நாடுகள் இதில் பங்கேற்கின்றன.
இருந்தாலும், இந்தக் கூட்டத்தின் மூலம் இஸ்ரேலின் எதிா்கால தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே என்று பாா்வையாளா்கள் கூறுகின்றனா்.
