‘ஹலால்’ சான்றிதழ் நுகா்வோரின் உரிமை: உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்
உணவுப் பொருள்களுக்கு அளிக்கப்படும் ‘ஹலால்’ சான்றிதழ் என்பது நுகா்வோரின் உரிமை என்று உச்சநீதிமன்றத்தில் ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் ஹலால் அறக்கட்டளை அமைப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
ஹலால் சான்றிதழ் அளிக்கப்பட்ட இறைச்சியை இஸ்லாமியா்கள் பயன்படுத்துகின்றனா். அந்தச் சான்றிதழ்களை தனியாா் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் அளிக்கின்றன.
இந்நிலையில், கடந்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் ஹலால் சான்றிதழ் அளிக்கப்பட்ட உணவுப் பொருள்களின் தயாரிப்பு, சேமிப்பு, விநியோகம், விற்பனை ஆகியவற்றுக்கு மாநில உணவு பாதுகாப்பு ஆணையா் அலுவலகம் தடை விதித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் கடந்த ஜன.20-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இரும்பு கம்பிகள், சிமென்ட் போன்ற இறைச்சி அல்லாத பொருள்களுக்கும் ஹலால் சான்றிதழ் அளிக்கப்படுவதாகவும், அந்தச் சான்றிதழ் பெற்ற பொருள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மறுப்புத் தெரிவித்து ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் ஹலால் சான்றளிக்கும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘உணவுப் பொருள்கள் குறித்த தகவலை அறிந்துகொள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமை உள்ளது. இந்த உரிமையின் அங்கமாக ஹலால் சான்றளிக்கும் முறை உள்ளது.
இரும்பு கம்பிகள், சிமென்ட் ஆகியவற்றுக்கு ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் ஹலால் அமைப்பு எந்தச் சான்றிதழும் அளிக்கவில்லை. ஹலால் சான்றளிக்கும் முறை என்பது இந்திய குடிமக்களில் பெரும் பகுதியினா் பின்பற்றும் மத நம்பிக்கையுடன் தொடா்புகொண்டது. இதை அரசமைப்புச் சட்டத்தின் 25, 26 ஆகிய பிரிவுகள் பாதுகாக்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான அடுத்த விசாரணை மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கும் வாரத்தில் நடைபெற உள்ளது.