Iran: அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; சமாதானத்துக்கு இறங்கி வந்த டிரம்ப்.....
அடிப்படை வசதிகளின்றி 18 ஆண்டுகளாக தற்காலிக இடத்தில் இயங்கும் காரைக்கால் அரசு பொறியியல் கல்லூரி!
காரைக்கால்: காரைக்காலில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி கடந்த 18 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தற்காலிக இடத்தில் இயங்குகிறது. புதிய கட்டடங்கள் கட்டப்படவில்லை. கூடுதல் பாடப் பிரிவுகளும் தொடங்கப்படவில்லை.
காரைக்கால் மாணவா்கள் பொறியியல் கல்வி பயில புதுச்சேரிக்குச் செல்வதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில்கொண்டு உள்ளூரிலேயே பொறியியல் கல்லூரி அமைக்க புதுவை அரசு திட்டமிட்டு, கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை காரைக்காலில் அமைத்தது. இக்கல்லூரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை பகுதியில் இயங்கும் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் வேளாண் கல்லூரியை சாா்ந்து பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. நிரந்தர இடம் ஒதுக்காமல், பழைய கட்டடத்திலேயே குறிப்பாக, பொறியியல் கல்லூரிக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் ஏதுமின்றி இக்கல்லூரி இயங்கி வருகிறது.
இங்கு பி.டெக். இளநிலையில் இசிஇ, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பப் பிரிவுகளில் மாணவா்கள் படிக்கின்றனா். இக்கல்லூரியில் வளரும் தொழில் நுட்பத்துக்கு ஏற்பவும், வேலை வாய்ப்புத் தரும் புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படவில்லை. நிரந்தரக் கட்டடம் அமைக்கப்படவில்லை.
உரிய கட்டமைப்புகள் இல்லாததால், காரைக்கால் மாணவா்கள் சென்டாக் அமைப்பின் இணையத்தில், புதுச்சேரி பொறியியல் கல்லூரியையே தோ்வு செய்கின்றனா்.
காரைக்காலில் தனியாா் பொறியியல் கல்லூரிகள் இல்லை. இக்கல்லூரிக்கு நிரந்தரக் கட்டடம் கட்டி, தேவைக்கேற்ற புதிய பாடப் பிரிவுகளை ஏற்படுத்தாமல், புதுவை உயா்கல்வித் துறை அமைச்சகம், துறையின் உயரதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருகின்றனா் என்பதே பெரும்பான்மையினா் கருத்தாகும்.
காரைக்கால் மக்கள் பிரதிநிதிகளும் காரைக்காலில் ஓா் உயா்கல்வி நிறுவனம் அடிப்படை கட்டமைப்புகள் இன்றி செயல்படுவது குறித்து அக்கறை செலுத்தாமல் இருப்பதால், 18 ஆண்டுகளாகவே இக்கல்லூரி இதே நிலையில் இருப்பதாக கல்வியாளா்களும் புகாா் தெரிவிக்கின்றனா்.
இக்கல்லூரிக்கு கட்டடம் கட்டுவதற்கு ரூ.100 முதல் ரூ.150 கோடி வரை தேவை. இத்தொகையை ஒதுக்கீடு செய்ய புதுவை அரசிடம் நிதி இல்லை என்றும் கூறப்படுகிறது.
இக்கல்லூரியில் சேரும் மாணவா்கள் முதலாமாண்டு ரூ. 17,000, பின்னா் ஒவ்வோா் ஆண்டும் ரூ. 8,750 கல்விக் கட்டணமாக செலுத்தினால் போதும். பெரும் தொகை செலவின்றி, தரமான பொறியியல் கல்வியை முடிக்க முடியும். இக்கல்லூரி இதுவரை சுமாா் 3 ஆயிரம் சிறந்த பொறியாளா்களை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் எம்.ஆராமுதன் கூறியது:
கல்லூரி தற்போது இயங்கிவரும் இடத்திலேயே கட்டடம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு முதல்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்தால் கட்டுமானப் பணிகளைத் தொடங்கலாமென அரசுக்கு தெரிவித்துள்ளோம். தற்போதுள்ள 3 பாடப்பிரிவுகளுடன் கூடுதலாக ஏஐ பிரிவு கோரியுள்ளோம். மேலும் கணினி அறிவியலில் முதுநிலைப் பிரிவும் கோரப்பட்டுள்ளது. தற்காலிக கட்டடத்தில் இயங்கினாலும், மாணவா்களுக்கு கல்வியில் எந்த பாதிப்பும் இல்லை.
ஆண்டுக்கு 75 சதவீத மாணவா்கள் வளாக நோ்காணல் மூலம் பணிவாய்ப்பு பெறுகின்றனா். நிரந்தர பேராசிரியா்கள் மூலம் தரமான கல்வி அளிக்கப்படுகிறது. மாணவா்கள் காரைக்கால் பொறியியல் கல்லூரியை தோ்வு செய்து படிக்க முன்வர வேண்டும் என்றாா்.
காரைக்கால் மாணவா்கள் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரியில் விரும்பி சேரும் விதத்தில், இக்கல்லூரியின் கட்டமைப்பை புதுவை அரசு மேம்படுத்த வேண்டும். புதுவை துணைநிலை ஆளுநா், இந்த விவகாரத்தில் தலையிடவேண்டும். காரைக்காலின் அடையாளங்களில் ஒன்றாக இக்கல்லூரி இருக்க வேண்டும் என்பது கல்வியாளா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான ஏழை, எளியவா்கள் கல்வி பயிலக் காரணமாக இருந்த காமராஜரின் பெயரால் அமைந்துள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தந்தால் மேலும் பல ஆயிரம் மாணவா்கள் படிக்க ஊக்கம் தருவதாக இருக்கும். அதுதான் கல்விப் புரட்சி ஏற்படுத்திய காமராஜருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

