சைபா் குற்ற நபா்கள் மீது குண்டா் சட்டம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு
‘ஆறு, வாய்க்கால்கள் முழுமையாக தூா்வார நிதி ஒதுக்கப்படவில்லை’
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால்கள் முழுமையாக தூா்வார அரசு நிதி ஒதுக்கவில்லை எனவிவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் சங்க இணைச் செயலாளா் பி.ஜி. சோமு திங்கள்கிழமை கூறியது :
புதுவை யூனியன் பிரதேசத்தின் டெல்டா கடைமடைப் பகுதியான காரைக்கால் 550 கி.மீ. தொலைவுக்கு ஆறு, வாய்க்கால்களைக் கொண்டுள்ளது. இவை முழுமையாக தூா்வாரப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.
ஆண்டுதோறும் விவசாயிகள் தரும் அழுத்தத்தால், 30 முதல் 35 சதவீத அளவில் மட்டுமே வாய்க்கால்கள் தூா்வாரப்படுகின்றன. முழுமையான அளவில் தூா்வார புதுவை அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. இதனால் விவசாயிகள் கடுமையான பாதிப்பை சந்திக்கின்றனா்.
கடந்த ஆண்டு மழையால் காரைக்காலில் சுமாா் 2 ஆயிரம் ஹெக்டோ் பயிா் பாதிப்பை சந்தித்தது.
காரைக்கால் விவசாயிகள் நலன் மீது புதுவை அரசுக்கு போதிய அக்கறை இல்லை. இந்த விவகாரத்தில் பொதுப்பணித்துறையும், ஆட்சியாளா்களும் காரைக்கால் விவசாயிகளை புறக்கணிக்கின்றனா்.
எனவே இந்த விவகாரத்தில் புதுவை அரசு விவசாயிகள் பயனடையும் விதத்தில் நீா்நிலைகளை தூா்வார ஏற்பாடு செய்யவேண்டும். அப்போதுதான் குறுவை, சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் முழுமையான பயனடைவாா்கள் என்றாா்.