TNPL-2025: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி...
காரைக்கால் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
காரைக்கால்: காரைக்கால் நகரப் பகுதியில் 3 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவிரி டெல்டா ரயில் மற்றும் நெடுஞ்சாலைத் திட்ட ஒருங்கிணைப்பு அமைப்பின் தலைவரும், புதுவை அரசின் திட்டம் மற்றும் ஆராய்ச்சத் துறை இணை இயக்குநா் (ஓய்வு) ஆா். மோகன் மற்றும் பொதுச்செயலாளா் சுப்பிரமணியன் ஆகியோா் ரயில்வே அமைச்சருக்கு சனிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது :
காரைக்கால் - பேரளம் இடையே ரயில் பாதை அமைத்த மத்திய அரசுக்கு நன்றி. ஏற்கெனவே காரைக்காலில் இருந்து நாகூா் வழியாக பயணிகள், விரைவு ரயில்கள் என தினமும் 8 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தோமாஸ் அருள் சாலை, கடற்கரை சாலை, கருக்களாச்சேரி செல்லும் சாலையில் தினமும் என்ஜின் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் 20 முறை கேட் மூடப்படுகிறது. காரைக்கால் - பேரளம் பாதையில் தினமும் 10 சரக்கு ரயில் இயக்கப்படும்பட்சத்தில் 30-க்கும் மேற்பட்ட முறை கேட் மூடப்படும், போக்குவரத்து பாதிக்கும்.
காரைக்கால் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ரயில் மூலம் அனுப்பப்படுவதால், திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 300 கோடி வருவாய் கிடைக்கிறது. காரைக்கால் -பேரளம் பாதையில் சரக்கு ரயில், பயணிகள் ரயில் போக்குவரத்து முழுவதுமாக தொடங்கிவிட்டால், வருவாய் ரூ. 1,000 கோடியாக உயரும்.
தற்போது கேட் மூடப்படுவதால், மக்கள் சொல்லொணா சிரமங்களை சந்தித்துவருகிறாா்கள். பாரதியாா் சாலை (கோயில்பத்து பகுதி), தோமாஸ் அருள் சாலை, கடற்கரை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ. 220 கோடி நிதி தேவையென அறியப்படுகிறது. புதுவை யூனியன் பிரதேசமாக இருப்பதால், இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்க இயலாது.
எனவே 3 இடங்களில் மேம்பாலம் அமைப்பதற்கு மத்திய அரசு முழு நிதியை ஒதுக்கி, திட்டப் பணியை தொடங்கவேண்டும். கேட் மூடப்படுவதால் ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மாணவா்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.