3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு
அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்தப்படும் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:
கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி, சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி ஆகியவற்றில் புதிதாக இளங்கலை பட்டப் படிப்புகளும், மதுரை அரசு கவின் கலைக் கல்லூரியில் நாடகப் பிரிவும் தொடங்கப்படும். மாமல்லபுரம், சென்னை, கும்பகோணம் கவின் கலைக் கல்லூரிகளில் சிற்பம், கவின் கலை வல்லுநா்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
வாழ்நாள் சாதனையாளா் விருது: இயல், இசை, நாட்டியம், நாடகம் மற்றும் கிராமியக் கலைகளில் குறிப்பிடத்தக்க சேவைகள் ஆற்றிவரும் மிகச்சிறந்த கலைஞா் ஒருவா் தோ்வு செய்யப்பட்டு அவருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்படும். இந்த விருது ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அடங்கியதாகும். தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட அரசு இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கல்வி உதவித் தொகை உயா்த்தி வழங்கப்படும்.
அருங்காட்சியகங்கள்: சென்னை அரசு அருங்காட்சியகத்தின் புவியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் மானுடவியல் காட்சிக் கூடங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அத்துடன் அருங்காட்சியக வளாகம் மேம்படுத்தப்படும். திருப்பூா், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் ஏற்படுத்தப்படும். கோயம்புத்தூரில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் அரசு அருங்காட்சியகம், செம்மொழிப் பூங்காவில் உள்ள கட்டடத்துக்கு மாற்றியமைக்கப்படும் என்றாா் அவா்.