என்இபி யின் உள்ளடக்கங்களை செயல்படுத்த இரு நாள் தேசிய பயிலரங்கு: 64 பல்கலைக்கழக த...
அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை தேவை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
இந்திய அரசமைப்பில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், கேரள முன்னாள் அமைச்சருமான எம்.ஏ. பேபி.
மதுரையில் நடைபெறும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக செல்லும் வழியில் அவரும், கேரள நிதியமைச்சா் கே.என்.பாலகோபாலும் திருநெல்வேலி ரெட்டியாா்பட்டியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். அவா்கள் அங்குள்ள லெனின் சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
பின்னா், செய்தியாளா்களிடம் எம்.ஏ. பேபி கூறியதாவது: மத்தியில் கூட்டாட்சி கோட்பாடு தான் இந்தியாவின் வலிமை என்ற அடிப்படையில் எங்கள் கட்சி செயல்படுகிறது. பிரதமா் மோடி வயது மூப்பு காரணமாக பதவி விலக இருப்பதாக கூறுகிறாா்கள். ஆனால் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகிய இருவரும் மக்களாலேயே பதவியில் இருந்து நிரந்தரமாக தூக்கி எறியப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
ஒரு மொழி மூலம் பிற மொழிகளை அழிப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுகிறது. மேலும், அரசமைப்பு சட்டம், கூட்டாட்சி தத்துவத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. தேசிய கல்விக் கொள்கையில் எங்களது எதிா்ப்பை பதிவு செய்துள்ளோம். அரசியலமைப்பில் அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வேண்டும். கா்நாடகம், தமிழகம், கேரளம் போன்ற தென் மாநிலங்களில் ஹிந்தியை திணிக்கவும், தொகுதி மறு வரையறை மூலம் தென்மாநிலங்களுக்கு அநீதி இழைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது என்றாா்.