அன்புமணி: `தனிக்கட்சி, களை, மதிக்கவில்லை, தான்தோன்றித்தனம்.!’ - ராமதாஸ் பேச்சின் ஹைலைட்ஸ்
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு கூறிய 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்குமாறு கால அவகாசத்தை ராமதாஸ் கொடுத்திருந்தார்.
ஆனால் அன்புமணி எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காததால் அன்புமணியை பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி மீது ராமதாஸ் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டுகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
அன்புமணி மீது ராமதாஸ் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டுகள்
* அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க 2 முறை அவகாசம் வழங்கியும் அதற்கு பதில் அளிக்காததால் கட்சியில் இருந்து அவரை நீக்குகிறேன்.
* பாமக தலைமைக்கு கட்டுப்படாத, தான்தோன்றித்தனமாக, அரசியல்வாதி என்பவருக்கு தகுதியற்றவராகவே செயல்பட்டு வருகிறார் அன்புமணி.

* தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தந்தை சொல்லைக்கேட்டு நடக்க வேண்டும் என்று மூத்தவர்கள் சிலர் அன்புமணிக்கு அறிவுரை வழங்கினார்கள். ஆனால் அதை அன்புமணி எதையும் மதிக்கவில்லை.
* அன்புமணியின் செயலால் இரும்பு போன்ற என் இதயம் நொறுங்கிவிட்டது.
* நாம் ஒரு பயிரிட்டால் கண்டிப்பாக களை முளைக்கத்தான் செய்யும். ஆனால் களை முளைக்குமே என்று யாரும் பயிரிடாமல் இருப்பதில்லை. தற்போது களையை நீக்கிவிட்டோம். வளர்ச்சிக்குக் குந்தகமாக இருக்கும் அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம்.
* தேவைப்பட்டால் அவர் தனிக் கட்சியைத் தொடங்கலாம். ஆனால் அவர் தனிக்கட்சி தொடங்கினாலும் அது வளராது.
* என்னுடன் 40 முறை பேசியதாக அன்புமணி கூறுவது பொய். அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்பதை விட மோசமான பொய். அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

* 16 குற்றச்சாட்டுகளில் என்னை உளவுபார்த்த குற்றச்சாட்டும் ஒன்று. அதுதான் நான் மிகவும் மனது வருந்திய குற்றச்சாட்டு. இந்த இடத்தில் வேவுபார்ப்பதற்கு என்ன இருக்கிறது.
* 46 ஆண்டுக் காலம் அரும்பாடுபட்டு வளர்த்த இந்தக் கட்சி அன்புமணியால் அழிகிறது.