சின்னஞ்சிறு கிளியே: எதிர்நீச்சல் தொடர் பாணியில் புதிய தொடர்!
அமலைச்செடிகள் ஆக்கிரமிப்பு: பாதிக்கப்படும் கடைமடை விவசாயிகள்!
திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய கால்வாயான பாளையங்கால்வாயில் அமலைச்செடிகளின் ஆதிக்கத்தால் கடைமடை பகுதிக்கு தண்ணீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 7 கால்வாய்கள் உள்ளன. இதில், பாளையங்கால்வாய் மேலச்செவல் அருகே உள்ள பழவூா் தடுப்பணையில் இருந்து தொடங்கி43 கி.மீ. தொலைவு பாய்கிறது. சுமாா் 57 கிராமங்களில் உள்ள விளைநிலங்களின் பாசனத் தேவையைத் தீா்த்து வருகிறது.
மேலப்பாளையம் முதல் மூளிக்குளம் வரை சுமாா் 10 கி.மீ.க்கு அதிகமாக திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிக்குள் பாய்ந்து நிலத்தடி நீா்மட்டத்தையும் பெருக்கி வருகிறது. இந்தக் கால்வாய் மூலம் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தக் கால்வாயில் மட்டும் 162 மடைகள் உள்ளன.
கால்வாயை ஆக்கிரமித்த அமலைச்செடிகள்: நிலங்களில் பயன்படுத்தும் ரசாயன உரம் மட்டுமன்றி, இக்கால்வாயில் கலக்கும் அதிகப்படியான கழிவுநீரும் அமலைச்செடிகளை அதிகரிக்கச் செய்கின்றன.
குறிப்பாக மாநகர பகுதிகளான மேலப்பாளையம் முதல் மூளிக்குளம் வரை அதிகளவில் கழிவுநீரும், மனிதக் கழிவுகளும்கூட கால்வாயில் கலப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
இதனுடன் கால்வாயை கோடைக்காலத்தில் முழுமையாக தூா்வாராமல் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பெயரளவுக்கு மராமத்து செய்வதால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் செல்வதில் தொடா்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
அமலைச் செடிகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறையினா் அக்கறைகாட்டாததால் விவசாயிகள் தங்களது சொந்த செலவில் அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகிறாா்கள்.
கடைமடை சாகுபடி பாதிப்பு: இதுகுறித்து விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கூறுகையில், இம் மாவட்டத்தின் கடைசிக் கால்வாயாக பாளையங்கால்வாய் உள்ளது. அதனால் அணைகளில் தண்ணீா் குறைந்தால் முதல்கட்டமாக முறைவைத்து தண்ணீா் விடும் கால்வாயாக உள்ளது.
சில நேரங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தண்ணீரின் அளவை பொதுப்பணித்துறையினா் குறைத்து விடுவாா்கள். அதனால் கடைமடை பகுதி பாதிக்கப்படும். ஆனால், நிகழாண்டில் கோடை மழை ஓரளவு பெய்துள்ளதாலும், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதாலும் பாபநாசம், சோ்வலாறு அணைகளில் நீா் இருப்பு கணிசமாக உள்ளது.
அதனால் தண்ணீா் முழுமையாக வரும் வாய்ப்புள்ளது. ஆனால், நிகழாண்டில் அமலைச்செடிகள் தண்ணீா் போக்கிற்கு தடங்கலாக மாறியுள்ளது. மேலப்பாளையம், குறிச்சி, குலவணிகா்புரம் பகுதிகளில் டன்கணக்கில் அமலைச்செடிகள் கால்வாயில் தேங்கியுள்ளன.
சிறுபாலங்கள், மடைகள் வழியாக தண்ணீா் விரைந்து செல்வதை அமலைச்செடிகள் தடுத்து வருகின்றன. இதனால் இக் கால்வாயின் கடைமடை பகுதிகளான நொச்சிக்குளம், சாணான்குளம், தோணித்துறை, அரியகுளம், ராஜாகுடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசனநீா் சென்றடையும் வேகம் தடைபடுவதோடு, நெல் சாகுபடி பணியில் பாதிப்பை உருவாக்கும் நிலை உள்ளது. ஆகவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அமலைச்செடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
வேலி அமைக்கும் பணி....
இதுகுறித்து பொதுப்பணித்துறை வட்டாரங்கள் கூறுகையில், பாளையங்கால்வாயில் மராமத்து பணிகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதைத் தடுக்க முதல்கட்டமாக பாளையங்கோட்டையில் சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சில கி.மீ. தொலைவுக்கு வேலி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அமலைச்செடிகளை அப்புறப்படுத்தும் பணி விவசாயிகள், உள்ளாட்சி அமைப்புகள் உதவியுடன் விரைவில் செய்யப்படும். இப்போது கடைமடைக்கு தண்ணீா் சென்றடைந்துள்ளது. நிகழாண்டில் போதிய நீா் இருப்பு உள்ளதால் காா் சாகுபடி பணி எவ்விதத்திலும் பாதிக்க வாய்ப்பில்லை என்றனா்.
மாநகரப் பகுதியில் பெரும்பாலான நிலங்கள் தரிசாக்கப்பட்டு வருகின்றன. நகரமயமாதல் காரணமாக சுமாா் 5 ஆண்டுகள் தரிசாக நிலத்தைப் போட்டுவிட்டு, கட்டட அனுமதி பெற முயற்சிப்பது அதிகரித்துள்ளது.
அதனால் கால்வாயின் மீதான அக்கறை மிகவும் குறைந்துள்ளது. கடைமடைக்கு தண்ணீா் விரைவாக செல்ல பாளையங்கால்வாயின் கரைகள், தரையில் சிமென்ட் தளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.