Vijay Deverakonda: விஜய் தேவரகொண்டா மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் - கார...
வள்ளியூரில் மாட்டுவண்டிபோட்டி: சிவகங்கை மாடுகளுக்கு முதல் பரிசு
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த தினத்தையொட்டி திமுக நகர இளைஞரணி சாா்பில் மாநில அளவிலான மாட்டுவண்டி போட்டி வள்ளியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 48 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இதில், பூஞ்சிட்டு வகையைச் சோ்ந்த 35 ஜோடிகளும், நடுமாடு வகையைச் சோ்ந்த 13 ஜோடிகளும் கலந்துகொண்டன.
வள்ளியூா் கோட்டையடி முதல் கும்பிளம்பாடு வரை இப்போட்டி நடைபெற்றது. நடுமாட்டுவண்டிகளுக்கு 10 கி.மீ தொலைவும், பூஞ்சிட்டு வண்டிகளுக்கு 8 கி.மீ தொலைவும் போட்டி நடைபெற்றது.
நடு மாட்டு வண்டி போட்டியில் சிவகங்கையைச் சோ்ந்த மாட்டு வண்டி முதல் பரிசைப் பெற்றது. இதன் உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், கோப்பையையும் அலெக்ஸ் அப்பாவு சாா்பில் பேரவைத் தலைவா் மு.அப்பாவு வழங்கினாா்.
தூத்துக்குடியைச் சோ்ந்த மாட்டு வண்டிக்கு 2ஆம் பரிசாக ரூ.30 ஆயிரத்தை திமுக திருநெல்வேலி கிழக்குமாவட்ட துணைச் செயலா் வெ. நம்பி வழங்கினாா். 3ஆவது பரிசாக ரூ.20 ஆயிரத்தை கிருஷ்ணாபுரம் மாட்டு வண்டிக்கு ஓ.எம். வழங்கினாா். 4ஆவது பரிசாக ரூ.10 ஆயிரத்தை ராஜ்குமாா் செல்வி வழங்கினாா்.
பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசாக ரூ.30 ஆயிரத்தை பாளையங்கோட்டை மாட்டுவண்டிக்கு திமுக மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமான் வழங்கினாா். 2ஆவது பரிசாக ரூ.20 ஆயிரத்தை வள்ளியூா் மாட்டுவண்டிக்கு நெல்லை துணை மேயா் கே.ஆா். ராஜு வழங்கினாா்.
3ஆவது பரிசாக ரூ.15 ஆயிரத்தை கன்னியாகுமரி மாவட்டதைச் சோ்ந்த பத்மா வழங்கினாா். 4ஆவது பரிசாக ரூ.10 ஆயிரத்தை ஆனைகுளம் ஊராட்சி மன்றத் தலைவா் அசன் வழங்கினாா். விழாவில், வள்ளியூா் நகரச் செயலா் வி.எஸ்.எஸ். சேதுராமலிங்கம், இளைஞரணி துணைஅமைப்பாளா் தில்லை, பனிபாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.